தேர்தலுக்குப் பின் மீதமுள்ளோருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை: உறுதியளித்த கதிர் ஆனந்த்

  • IndiaGlitz, [Monday,April 15 2024]

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தேர்தல் முடிந்தவுடன் ரூ.1000 உரிமை தொகை இதுவரை கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் அவருக்கு நல்ல வரவேற்பை தந்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த கதிர் ஆனந்த் ’தேர்தல் முடிந்தவுடன் ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஒரு சிலர் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியதை அடுத்து அவர்களுக்கு பிங்க் கலரில் ஒரு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் முடிந்தவுடன் சிறப்பு முகாம் நடத்த முதலமைச்சர் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த முகாமில் பிங்க் கலர் விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்து வந்து கொடுத்தால் உடனே அவர்களுக்கு ரூ.1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்றும் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடனே அந்த பிரச்சனையும் சரி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அவருடைய இந்த உறுதிமொழிக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.