தனுஷை மகன் என கோரிய மதுரை தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம்.. என்ன நடந்தது?

  • IndiaGlitz, [Saturday,April 13 2024]

நடிகர் தனுஷை தனது மகன் என்று மதுரையை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த தம்பதி வீட்டில் நிகழ்ந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் தான் தனுஷ் என்றும், தனுஷ் தான் எங்களை பராமரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மதுரை தம்பதியினர் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தனுஷை மகன் என்று உரிமை கொண்டாடிய கதிரேசன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது உடல் மோசமானது என்றும் இன்று காலை அவர் உயிரிழந்தார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தனுஷ் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தனது கணவரின் டிஎன்ஏவை சேகரித்து பாதுகாக்க வேண்டும் என்று மீனாட்சி மற்றும் அவரது வழக்கறிஞர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.