போனை வைத்துக்கொண்டு சும்மா இருங்க… மக்களே!!! அலறும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!!!

  • IndiaGlitz, [Monday,March 30 2020]

 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலகமே வீடுகளில் முடங்கி கிடக்கிறது. இந்தியாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பலரும் தங்களது பொழுதை ஆண்ட்ராய்டு போன் மற்றும் தொலைக்காட்சிகளில் கழித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் வீட்டில் இருந்தபடியே பணிசெய்யும் பணியாளர்களும் அதிகரித்துள்ளனர். இதனால் முன்பைவிட 30% நெட்வொர்க்கின் பயன்பாடு அதிகரித்து இருப்பதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூறுகின்றன.

ஊரடங்கு உத்தரவினால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத் தளங்களங்களைப் பயன்படுத்தும் அளவு அதிகரித்துள்ளது. கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்கிற பேர்வழியில் அனுப்பப்பட்ட செய்திகளையே திரும்ப திரும்ப பலரும் பகிர்ந்து கொண்டுவருவதும் அதிகரித்துள்ளது. டிக்டாக் போன்ற செயலிகளை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட அதையும் ஒருகை பார்ப்போம் எனப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

கொரோனாவினால் எதோ அலுப்புத் தட்டி வீடுகளில் இருப்பவர்களைப் போன்று புதிய புதிய மீம்ஸ்களை உருவாக்கி அதையும் ஒருபக்கம் பகிர்ந்து கொண்டுவருகின்றனர். 21 நாள் ஊரடங்கு என்பதால் மட்டுமல்ல, இந்தியர்கள் தங்களது அன்றாட வழக்கங்களிலும் இதுபோன்ற செயலிகளை தேவையே இல்லாமல் பயன்படுத்தி வருவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்த 2020 புத்தாண்டிற்கு மட்டும் வாழ்த்துக்கள் சொல்வதற்காக 2,000 கோடி செய்திகள் பகிரப்பட்டு இருக்கிறதாம். வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது எனப் புகைப்படுத்தையும் வாழ்த்துச்செய்திகள் சேர்த்து கொண்டுவிடுகிறது. ஒரு இந்தியன் சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பாடல் கேட்கிறாராம். குறைந்தது 3 மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கிறாராம். இதில் தமிழர்கள் ஒருபடிமேலே சென்று 4 மணிநேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்களாம். இத்தனையும் தாண்டி, நெட்ஃபிளிக்ஸ், அமேஸாம் பிரரைம் என அதிலும் நேரத்தை செலவழித்து வருகிறோம். இதனால் இந்தியாவில் சென்ற வருடத்தை விட 140 சதவீதம் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறதாம். தற்போது ஊரடங்கு உத்தரவினால் 30 % இணையத்தின் பயன்பாடு மேலும் அதிகரித்து இருக்கிறது.

வெறுமனே இது ஏதோ இணையத்தின் பயன்பாடு என்று மட்டும் பார்க்கமுடியாது. ஒருநாளில் தேவையில்லாமல் வாட்ஸ்அப், வீடியோ, டிக்டாக் செயலி என்று அதிகபடியான நேரத்தை தொலைபேசிகளில் கழித்து வரும் நமது பழக்க வழக்கங்களையும் இதன்மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒருநாளில் சராசரியாக ஒரு இந்தியன் தனது 30 சதவீத நேரத்தை இப்படி அர்த்தமே இல்லாத செயலுக்காகப் பயன்படுத்துகிறோமாம்.

ஊரடங்கு உத்தரவை அடுத்து பல செல்போன்கள் அடிக்கடி ஹாங் ஆகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம் எனத் தேடிய ஆய்வுக்குழு கடைசியாக அதிகபடியான நெட்வொர்க் பயன்பாடுதான் காரணம் எனத் தெரிவித்து இருக்கிறது. தொலைத்தொடர்பில் முக்கிய அம்சமாக இருக்கும் வாட்ஸ் அப் செயலி, மொபைல் டேட்டாவை சிக்கனமாகப் பயன்படுத்தும்படி தங்களது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப்பில் Status வீடியோ வைப்பதற்கான கால அளவையும் குறைத்து இருக்கிறது. இதுவரை 30 நொடிகள் அனுமதிக்கப்பட்ட வீடியோ தற்போது 15 நொடியாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களைச் சிக்கனமாக டேட்டாவை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.