close
Choose your channels

டீ விற்று 26 நாடுகளைச் சுற்றிய காதல் ஜோடி… திடீர் மரணத்தால் சோகம்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டீ கடையில் வரும் வருமானத்தை வைத்து சர்வதேச சுற்றுலா சென்று மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தவர்கள் கேரளாவைச் சேர்ந்த தம்பதி கே.ஆர்.விஜயன்-மோகனா. 16 ஆண்டுகளில் 26 நாடுகளைச் சுற்றிப்பார்த்த இந்த ஜோடி, தங்களது சுற்றுலா நினைவுகளோடு வலம்வந்த நிலையில் நேற்று கே.ஆர்.விஜயன் மாரடைப்பால் காலமானார். இதனால் கேரளாவில் கடும் வருத்தம் ஏற்பட்டு இருக்கிறது.

கேரளாவின் கொச்சி அடுத்த காந்தி நகர் பகுதியில் ஸ்ரீபாலாஜி எனும் பெயரில் டீ கடை வைத்திருப்பவர் கே.ஆர்.விஜயன். தனது 16 ஆவது வயதில் சைக்கிளில் வைத்து டீ விற்க ஆரம்பித்த இவர் தற்போது 71 வயது வரையிலும் டீ மூலமே வருமானம் ஈட்டி வருகிறார்.

இவருடைய சுக, துக்கத்தில் கலந்து கொண்டு வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவர்தான் மனைவி மோகனா. இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்த நிலையில் இந்த தம்பதிகள் தங்களுடைய வாழ்க்கையை வாழ நினைத்தனர். அதனால் சுற்றுலா செல்வதில் ஆர்வம் கொண்ட இவர்கள் உலக நாடுகளைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என முடிவெடுத்து கடந்த 2007 ஆம் ஆண்டு முதன் முதலாக இஸ்ரேல் சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஆண்டு முழுவதும் டீ கடையில் உழைத்து தாங்கள் சேமித்து வைத்த பணத்தில் உலக நாடுகளுக்குச் சென்று வந்தனர். சில சமயம் வங்கியில் இருந்து கடன் வாங்கியும் சுற்றுலா சென்றனர். இது மீடியாக்களில் பேசுபொருளனாது.

இப்படி எகிப்து, ஜோர்டன், பாலஸ்தீன், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்ற இந்தத் தம்பதி கொரோனா அடங்கிய நிலையில் ரஷ்யா சென்று திரும்பினர். அடுத்து ஜப்பானுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் விஜயன் நேற்று மாரடைப்பால் காலமானார். இதையடுத்து மனைவி மோகனா சுற்றுலா நினைவுகளோடு தனது கணவரை பற்றி அசைப்போடத் துவங்கியுள்ளார்.

மனித வாழ்க்கையில் சொத்து, பணம் போன்றவறை மிக உயர்வாகக் கருதப்பட்டுவரும் நிலையில் இந்த ஜோடி தங்களுடைய சுகமான அனுபவங்களுக்காக உலகம் முழுவதும் பயணம் செய்ய நினைத்திருந்தனர்.

இதுகுறித்து “வியாபாரம், சம்பாத்யம் எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அதையே முதன்மையாக்கிக் கொண்டால் நமக்கான வாழ்க்கையை எப்போது வாழ்வது? நான் சென்ற இடங்களில் எனக்குக் கிடைத்த நினைவுகள் எல்லாம் எனக்காக நான் சேகரித்தவை. நான் இறக்கும்போது அவை என்னுடன் வரும். அந்த நினைவுகளை மட்டுமே நான் கொண்டாடுவேன். இதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது“ என்று ஒருமுறை விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.