இரட்டையர்களால் நிரம்பிய அதிசய கிராமம்? விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!

  • IndiaGlitz, [Tuesday,September 14 2021]

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொடின்ஹி எனும் கிராமத்தில் பிறக்கிற பெரும்பாலான குழந்தைகள் இரட்டையர்களாக இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த 50 வருடங்களில் மட்டும் 400 இரட்டையர்கள் இந்த ஒற்றை கிராமத்தில் பிறந்திருப்பது ஒட்டுமொத்த விஞ்ஞானிகளையும் கடும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

வளர்ந்துவிட்ட மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு இடையே இன்றைக்கும் இரட்டை குழந்தைகள் பிறப்பதை நாம் அதிசயமாகப் பார்த்து வருகிறோம். ஆனால் எந்தவித சிகிச்சையும் இன்றி ஒரு வீட்டில் ஒரு இரட்டை குழந்தைகளாவது பிறந்துவிடுகிற அதிசயத்தை கேரளாவில்தான் பார்க்க முடிகிறது. அந்த வகையில் 2000 குடும்பங்களை கொண்ட இந்த கொடின்ஹி கிராமத்தில் இதுவரை 400க்கும் மேற்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். அதாவது 800 குழந்தைகள்.

மேலும் 400 குழந்தைகள் இதே கிராமத்தில் தொடர்ந்து வளர்ந்து வருகிறார்களாம். இந்த அதிசயத்தைப் பார்த்து வியந்துபோன விஞ்ஞானிகள் பலமுறை இந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆனாலும் மற்ற இரட்டை குழந்தைகளைப் போலவே இந்த ஊர் இரட்டைக் குழந்தைகளும் சாதாரண உடல்நிலையையே கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு பெரும்பாலான இரட்டை குழந்தைகளிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்த மாதிரியிலும் வித்தியாசமான எதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து இரத்தம் சார்ந்த உடல் பரிசோதனைகளை விட்டுவிட்டு அந்த ஊரில் மேற்கொள்கிற உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, பழக்க வழக்கம் போன்றவற்றை தற்போது விஞ்ஞானிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

ஆனாலும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான உரிய காரணத்தை விஞ்ஞானிகளால் தெளிப்படுத்த முடியவில்லை. இதையடுத்து கொடின்ஹி கிராமத்தில் உள்ள காற்றும், குடிநீரும் இரட்டைக் குழந்தை பிறப்பதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சிலர் சந்தேகிக்கின்றனர்.

விஞ்ஞானிகள் இப்படி இரட்டை குழந்தைகளுக்கான காரணத்தை தேடி அலையும் அதேவேளையில் கொடின்ஹி கிராமத்தில் உள்ள மக்கள் இது கடவுள் கொடுத்த வரமாக நினைத்தே தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.