தண்டவாளத்தில் படுத்து செல்பி எடுத்த காதலர்கள்: அடுத்த நிமிடம் தற்கொலை

  • IndiaGlitz, [Saturday,March 21 2020]

ரயில் தண்டவாளத்தில் படுத்தபடியே செல்பி எடுத்துக் கொண்ட காதலர்கள் அடுத்த நிமிடம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆம்பூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்பூர் பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவரும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இருவருக்கும் நேரடியாக ஆரம்பத்தில் பழக்கமில்லை. பேஸ்புக் மூலம் காதலித்து அதன் பின்னர் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஆனால் நந்தினி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த இருந்தவர் என்பதால் ராமதாஸ் வீட்டில் இந்த காதலுக்கு சம்மதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்தாஸ் வீட்டை விட்டு வெளியேறி நந்தினியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இருவரும் ஆம்பூர் அருகே உள்ள ஒரு காட்டுப் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இருவரது வீட்டிலும் தங்கள் காதலை ஏற்காததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இதனை அடுத்து சென்னை பெங்களூர் செல்லும் ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தில் இருவரும் படுத்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டனர். அதன்பின் அந்த வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்களுடைய செல்போனை கைப்பற்றி அதில் இருந்த செல்பியும் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு வாழ முடிவு செய்த நிலையில் திடீரென தற்கொலை முடிவை ஏன் எடுத்தார்கள் என்பது குறித்தும், தற்கொலைக்கு முன் செல்பியை ஏன் எடுத்தார்கள் என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.