'தர்பார்' திரைப்படம் குறித்து லைகா அளித்த அதிர்ச்சி புகார் மனு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து தவறான தகவல்களை வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பப்பட்டு வருவதாக லைகா நிறுவனம் சைபர் கிரைம் போலீசுக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

லைக்கா நிறுவனம் என்ற நாங்கள் தயாரித்த ‘தர்பார்’ திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளிவந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் அச்சுறுத்தல் வந்துள்ளது. தயாரிப்பு நிறுவனமான எங்கள் நிறுவனத்திற்கும் விநியோகிஸ்தர்களுக்கும் மிகப்பெரிய இழப்பை உருவாக்கும் நோக்கத்துடன் ஒரு சிலர் இந்த படம் குறித்து தவறான தகவல்களை வாட்ஸ் அப் மூலம் பரப்பி வருகின்றனர். இந்த சட்டவிரோத நடவடிக்கையால் எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தவறான தகவல்களை பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த புகார் மனுவை அவசரமாக கவனிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று லைக்கா நிறுவனம் காவல்துறைக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளது.