இலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே!!! நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்!!!

  • IndiaGlitz, [Friday,August 07 2020]

 

கொரோனா பரவலுக்கு இடையிலும் இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டு நேற்று அதன் முடிவுகளும் அறிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் இருமுறை தள்ளி வைக்கப்பட்ட அந்நாட்டின் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன்தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. 7,200 வேட்பாளர்களுக்கு அந்நாட்டின் 1 கோடியே 60 லட்சம் மக்கள் வாக்களித்து உள்ளனர். இதில் 70% வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையர் மகிந்தா தேசப்பிரியா தெரிவித்து உள்ளார். வன்முறைகள் எதுவுமின்றி, உரிய சமூக இடைவெளியுடன் தேர்தல் நடந்ததகாவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே உருவாக்கிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி (SLPP) பிரதான வெற்றியைப் பெற்றுள்ளது. இக்கட்சியில் கோத்தபய ராஜபக்சே முக்கியப் பங்கு வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கிய எதிர்க் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி (SJP) சஜித் பிரேமதசா கட்சி இடம்பெற்றது. அந்நாட்டிலுள்ள 225 நடாளுமன்ற இடங்களில் 196 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மீதியுள்ள 29 இடங்களுக்கு கட்சிகள் பெறுகின்ற வாக்கு எண்ணிக்கையைக் கொண்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. அந்த வகையில் 225 க்கு SLPP 145 இடங்களை வெற்றிப் பெற்று முன்னிலையில் இருக்கிறது. இதனால் மகிந்த ராஜபக்சே அடுத்த பிரதமராகிறார். இவருக்கு பல உலகத் தலைவர்களும் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சஜித் பிரேமதாஸ் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி 54 இடங்களை பிடித்து இருக்கிறது. இவருக்கு கிடைத்த ஒட்டுமொத்த வாக்குகள் 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தேசிய மக்கள் சக்தி 4 லட்சத்து 45 ஆயிரத்து 958 வாக்குகளைப் பெற்று 3 இடங்களைப் பிடித்து இருக்கிறது. இலங்கையின் தமிழரசு கட்சி 3 லட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகள் பெற்று 10 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கிறது. நடைபெற்று முடிந்த இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி வரலாறு காணாத தோல்வியை அடைந்து இருக்கிறது. 2 லட்சத்து 49 ஆயிரத்து 435 வாக்குகளைப் பெற்று 1 இடத்தில் மட்டுமே அக்கட்சி வெற்றிப் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் தமிழ் மக்களின் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னிலை என 3 பிரிவாகப் பிரிந்து களம் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு இடத்தை மட்டுமே பெற முடிந்தது. மற்றுமுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (2), தேசிய காங்கிரஸ் (1), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (1), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (1), தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (1), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (10), முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு (1) ஆகிய இடங்களைப் பிடித்து இருக்கின்றன. இலங்கையின் அடுத்த பிரதமராகும் மகிந்த ராஜபக்சேவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.