விஜய்யை அடுத்து இந்த மாஸ் நடிகருடன் ஜோடி சேரணும்: மாளவிகா மோகனின் ஆசை

  • IndiaGlitz, [Saturday,March 20 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் பூங்கொடி என்ற சின்ன கேரக்டரில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதனை அடுத்து தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது

தற்போது பாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் தமிழில் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சில படங்களில் நடிக்க அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் மாளவிகா மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரின் புகைப்படங்களை பதிவு செய்து இந்த ஜோடி இணையவேண்டும் என்று யார் யாரெல்லாம் விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது முதல் நபராக ’நான்’ என்று மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார்

இதனை அடுத்து அவர் மாஸ் நடிகர் மகேஷ்பாபுவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஆசை விரைவில் நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.