close
Choose your channels

என் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..!

Thursday, December 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மத்தியப் பிரதேசத்தில் மனைவியைக் கொன்று விட்டு நாடகமாடிய கணவர், பிரேதப் பரிசோதனை அறிக்கையால் சிக்கியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அமிதேஷ் பட்டேரியா(35). இவர் அதே பகுதியில் முன்னாள் வங்கி அதிகாரியாக இருந்துள்ளார். இவருக்கு 35 வயதில் ஷிவானி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 30-ம் தேதி அமிதேஷ், தன் மனைவி ஷிவானியைப் பாம்பு கடித்ததாகக் கூறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவமனையில் ஷிவானியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னரே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் ஷிவானி இறப்புத் தொடர்பாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, ஷிவானியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஷிவானியின் உடலுக்கு முறைப்படி இறுதிச்சடங்கும் செய்துள்ளனர். ஷிவானி, பாம்பு கடித்ததால் உயிரிழந்ததாக அனைவரும் நினைத்திருந்த நிலையில் நேற்று முன் தினம் வெளியான அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை காவலர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதில் ஷிவானி பாம்பு கடித்ததால் உயிரிழக்கவில்லை, மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமிதேஷ் மீது சந்தேகம் கொண்ட காவலர்கள் முதலில் அவரிடம் சாதாரணமாக விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அமிதேஷ் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். அவர் மீது சந்தேகம் வலுக்கவே, போலீஸார் கிடிக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அதில் தான் செய்த தவற்றைத் தெரிவித்து தன் மனைவியைக் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமிதேஷ் அளித்த வாக்குமூலம் தொடர்பாகப் பேசியுள்ள போலீஸார், ``அமிதேஷ்- ஷிவானிக்கு இடையே கடந்த மூன்று வருடங்களாகத் தொடர் பிரச்னைகள் இருந்து வந்துள்ளன. இதனால் இருவரும் மனக் கசப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனக்கு அதிக பிரச்னையாக இருக்கும் மனைவியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் எனத் தன் தந்தை மற்றும் சகோதரியின் உதவியுடன் திட்டம் தீட்டியுள்ளார் அமிதேஷ்.

ஷிவானியைக் கொலை செய்வதற்காக 11 நாள்களுக்கு முன் ராஜஸ்தானிலிருந்து ஐயாயிரம் ரூபாயில் பாம்பு ஒன்றை விலைக்கு வாங்கி தன் வீட்டில் வைத்து, நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்துள்ளார் அமிதேஷ். இந்நிலையில் கடந்த மாதம் 30-ம் தேதி தன் இரு குழந்தைகளையும் தந்தை மற்றும் சகோதரியுடன் வெளியில் அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்த ஷிவானியின் முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துள்ளார்.

ஷிவானி இறந்த பிறகு தான் வாங்கி வந்த பாம்பை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொன்றுவிட்டு, அதன் பல் தடம் ஷிவானி உடம்பு மீது இருப்பது போல செட் செய்து அவரது உடம்புக்கு அருகே பாம்பையும் வைத்து விட்டு, வெளியில் வந்து தன் மனைவியைப் பாம்பு கடித்ததாக அக்கம்பக்கத்தினரிடம் நாடகமாடியுள்ளார். மருத்துவமனையிலும் அதே காரணத்தையே தெரிவித்துள்ளார். டிவி சீரியலைப் பார்த்து தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் அமிதேஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக உள்ள அமிதேஷ் மற்றும் அவருக்கு உதவி செய்த தந்தை, அமிதேஷின் சகோதரி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.மேலும் காசு கொடுத்து பாம்பு வாங்கி அதுவும் அடித்துக் கொலை செய்யப்பட்டதால், வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் அமிதேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.