close
Choose your channels

காதலிக்கவில்லை என்றால் இறந்துவிடுவேன்.. வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கு போட்ட இளைஞர்.

Thursday, February 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதலிக்கவில்லை என்றால் இறந்துவிடுவேன்.. வீடியோ காலில் பேசிக்கொண்டே தூக்கு போட்ட இளைஞர்.

சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையிலிருந்து டி.பி. சத்திரம் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பேசிய ஒருவர், `அண்ணாநகர் கிழக்கு, ஆர்.வி.நகர், முதல் அவென்யூ, திருவள்ளூவர் நகரில் குடியிருக்கும் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஜோனாதன் பமோயி (25) என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறினார். இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ஜோனாதன் தற்கொலை குறித்து விசாரித்தனர்.

இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீஸார் கூறுகையில், ``மணிப்பூரைச் சேர்ந்த ஜோனாதன் பமோயி, சென்னை அண்ணாநகரில் தங்கியிருந்து ஹோட்டல் ஒன்றில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்துவந்தார். இவர், 5.2.2020-ம் தேதி (நேற்று) மாலை ஹோட்டல் மேலாளரிடம் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் ஹோட்டலுக்குத் திரும்பிவரவில்லை. மறுநாளும் அவர் வேலைக்கு வரவில்லை. அதனால் ஹோட்டல் மேலாளர் சந்தேகமடைந்துள்ளார்.

இதையடுத்து ஜோனாதன் பமோயின் செல்போன் நம்பருக்குப் போன் செய்தார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அதனால் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு மேலாளர் சென்றார். அங்கு படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் போர்வையால் ஜோனாதன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அதைப்பார்த்து மேலாளர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் உதவியுடன் ஜோனாதனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று கூறினர். இதையடுத்து அவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஜோனாதன் பமோயி தற்கொலை செய்வதற்கு முன் வீடியோ காலில் பெண் ஒருவரிடம் பேசியது தெரியவந்தது.

அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, ஜோனாதன் பமோயி, தன்னை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தன்னைக் காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். சம்பவத்தன்று அந்தப் பெண்ணுக்கு வீடியோ காலில் பேசிய படியே ஜோனாதன் தூக்குப் போட்டுள்ளார். அவர் தங்கியிருந்த அறையில் சோதனை நடத்தியுள்ளோம். வீடியோ கால் தொடர்பாகவும் விசாரித்துவருகிறோம்" என்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.