Download App

Mannar Vagera Review

கிராமிய நகைச்சுவை படங்களில் நடித்து வெற்றி பெற்ற விமல் ஒரு முழு நீள குடும்ப கதையில் ஆக்க்ஷன் கலந்து தர முயன்றிருக்கிறார். பூபாபதி பாண்டியனுடைய அறுபதுகளுக்கே பழமையான கதை சொல்லியிருக்கும் யுக்தி இந்த கால பார்வையாளர்களை எந்த அளவுக்கு கவர்கிறது என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். 

விமல் மற்றும் கார்த்திக் குமார் ஊர் பெரியவர் பிரபுவின் மகன்கள் இளையவரான விமல் சட்டப்படிப்பு முடித்து தேர்வு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். துரு துரு என்று இருக்கும் கல்லூரி மாணவி ஆனந்தியை பார்த்ததும் காதல் கொள்கிறார் விமல் கொஞ்சம் காமடி கலந்த நாடகத்துக்கு பிறகு இருவரும் காதலர்களாகிறார்கள். கார்த்திக் குமார் தன் காதலிக்கு அவள் முறைப்பயனுடன் திருமணம் என்று கேள்வி பட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயல்கிறார். விமல் அந்த பெண்ணான சாந்தினி தமிழரசனை திருமண மண்டபத்திலேயே கடத்தி திருமணம் செய்து வைக்கிறார். சாந்தினியின் அண்ணனும் முறை மாமனும் விமலை தீர்த்து கட்ட சதி திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையில் அனந்தி சாந்தினியின் தங்கை என்று தெரிய வருகிறது அக்கா இடத்தில அவரை முறை பையன்னுக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சி நடக்க விமல் வென்றாரா  இல்லையா என்பதே மீதி கதை. 

விமல் கலகலப்பான காட்சிகளிலும் செண்டிமெண்ட்டிலும் சமாளிக்கிறார் ஆனால் மாஸ் சீன்களும் அதிரடி சண்டைகளும்தான் கொஞ்சம் இடிக்கிறது. இதுவரை பாவமான கதாபாத்திரங்களிலேயே நாம் பார்த்து பழகிவிட்ட அனந்தி இதில் துரு துரு கேரக்டரில் அழகாக பொருந்தி விடுகிறார். நகைச்சுவை டைமிங்கும் அவரிடம் நன்றாக வருவதால் அவர் வரும் காட்சிகள் எல்லாமே நமக்கு பெரிய ஆறுதல். கார்த்திக் குமாரும் சாந்தினியும் இரண்டாவது ஜோடியாக வந்து போகிறார்கள். பிரபு, ஜெயப்ரகாஷ், சரண்யா மற்றும் மீரா கிருஷ்ணன் தங்கள் அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ரோபோ ஷங்கரும் சிங்கம் புலியும் படம் முழுக்க வந்தாலும் அவர்கள் நகைச்சுவை கொஞ்சம் கூட எடு பட வில்லை. இவர்களை விட ஒரே காட்சியில் வரும் யோகி பாபு சிரிக்க வைத்து நம்மை கிளைமாக்ஸ் மூச்சு திணறலிலிருந்து காப்பாற்றுகிறார். வம்சி கிருஷ்ணா வில்லனாக வந்து முறைத்துக்கொண்டும் சவடால் விட்ட படியும் இருக்கிறார். 

படத்தில் கவர்வது என்று பார்த்தால் குடும்ப உறவுளுக்காக கோடி பிடிப்பதும் ஆபாசமற்ற அருவருப்பில்லாத காட்சிகள் வைத்ததையே சொல்லலாம். 

அரத பழசான கதை பாத்திரப்படைப்பில் ஆழமின்மை நொண்டி அடிக்கும் திரைக்கதை ஆகியவற்றால் இரண்டரை மணி நேர படம் ஒரு நாள் நகர்வது போல் பிரம்மை ஏற்படுத்துகிறது. விமல் கார்த்திக்குமார் பிரபு அவர் மகன்கள் சரண்யா அவர் அன்னன் சாந்தினி கார்த்திக் இப்படி வரும் முக்கியமானவர்களின் உறவில் அழுத்தம் இல்லாததால் அவர்களை சுட்டி பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையோடு நம்மால் ஒன்றவே முடியவில்லை. 

பி ஜி முத்தையா மற்றும் சூரஜ் நல்லுசாமி ஆகியோரின் ஒளிப்பதிவு மிக துல்லியம் பாடல் காட்சிகள் வண்ண மாயம் சண்டை காட்சிகளில் உபயோகப்படுத்தியிருக்கும் கோணங்களில் விமலை ஆக்க்ஷன் ஹீரோவாக பாதி நம்ப வைத்துவிடுகிறார்கள். ஜேக்ஸ் பேஜோய் இசையும் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பும் குறை சொல்லாத படி இருக்கின்றன. பூபதி பாண்டியனின் பலம் நகைச்சுவை அதுவே இந்த படத்தில் அடிபட்டு போவதால் அவர் சொல்லியிருக்கும் சென்டிமென்ட்களும் எடுபடவில்லை. விமல் தன் முதல் தயாரிப்பில தனக்கு ஏற்ற சரியான கதையை தேர்ந்தெடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். 

குடும்ப கதை விரும்பிகளுக்கு ஒருவேளை பிடிக்கலாம் 

Rating : 2.0 / 5.0