மழையை விட மேட்ச்தான் முக்கியமா? தமிழ்நாடு வெதர்மேன் ஆதங்கம்!

ஃபானி புயல் காரணமாகவும், அக்னி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதன் காரணமாகவும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. பொதுமக்கள் மதிய வேளையில் வீட்டை விட்டு வெளியே போக முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் ஓரளவு மழை பெய்து வருவதால் ஓரளவு குளிர்ச்சி காணப்படுகிறது. சென்னையிலும் மாலை முதல் மேகமூட்டமாக இருந்ததால் மழை வரும் அறிகுறி தெரிந்ததே. ஆனால் இன்று சென்னையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான பிளே ஆஃப் போட்டி இருப்பதால் பெரும்பாலான சமூக வலைத்தள பயனாளிகள் இன்று மழை வேண்டாம் என்று வருண பகவானுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் 'ரெயின் ரெயின் கோ அவே' என்ற பாடலையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவுகளை பார்த்து அவ்வப்போது துல்லியமாக வானிலை நிலவரங்களை தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன், 'ரெயின் ரெயின் கோ அவே என்ற வேண்டுதலை பார்த்து ஆச்சரியம் அடைகிறேன். மழை முக்கியமில்லை போல, மேட்ச்தான் வேணும் போல' என்று ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார்.