அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த தமிழ் திரைப்பட நடிகை!

பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும், சிம்பு நடிக்கவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தை தயாரிக்கவிருப்பவருமான சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படம் கடந்த மாதம் 11ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை நேற்று தமிழக செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் பார்த்து படக்குழுவினர்களை பாராட்டினார். குறிப்பாக இந்த படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்காவை தனது வீட்டிற்கு வரவழைத்து ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக அவருக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது ஸ்ரீபிரியங்காவின் அப்பா அம்மா உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் காவலர் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா பெண் காவலரின் கேரக்டரில் தத்ரூபமாக நடித்துள்ளதாகவும், பொது இடத்தில் பெண் பாதுகாவலர்கள் பணியில் இருக்கும்போது அவர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகள் இந்த படத்தில் ஆழமாக அலசப்பட்டிருப்பதாகவும் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.