கமல் கட்சி வேட்பாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தினகரன்!

  • IndiaGlitz, [Saturday,March 30 2019]

வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு சமீபத்தில் தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை வழங்கியது. தேர்தல் நடைபெற இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் அதற்குள் எப்படி ஒரு புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டுபோய் தினகரன் சேர்ப்பார் என்ற சந்தேகம் பலரது மனதில் இருந்தது.

பல வருடங்கள் கட்சி நடத்தும் ஒருசிலரே தங்கள் சொந்த கட்சியின் சின்னத்தில் நிற்காமல் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில், டிடிவி தினகரன் வேட்பாளர்களுக்கு சின்னத்தை பிரபலப்படுத்துவது ஒரு சவால் என்றே கருதப்பட்டது

ஆனால் காலையில் சின்னத்தை தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் மாலைக்குள் பெரும்பாலானோர் வீடுகளில் பரிசுப்பெட்டி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு தினகரனின் ஆட்கள் படுவேகமாக பரிசுப்பெட்டிகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து சின்னத்தை பிரபலப்படுத்தியுள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் மூகாம்பிகா, அந்த தொகுதியில் உள்ள ஒரு பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றபோது அங்குள்ள பலரது வீடுகளில் பரிசுப்பெட்டி இருந்ததை பார்த்தாராம். மேலும் தினகரன் கட்சியினர் பரிசுப் பெட்டி கொடுத்ததாகவும், நீங்கள் எப்போது டார்ச் லைட் கொடுப்பீர்கள் என்றும் அந்த பகுதி பெண்கள் பலர் கேட்டது தனக்கு அதிர்ச்சியை தந்ததாகவும் கூறியுள்ளார்.