close
Choose your channels

கொரோனா- கண்களைப் பறித்துவிடும் கருப்பு பூஞ்சை? எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

Friday, May 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கருப்பு பூஞ்சை எனப்படும் மற்றொரு உயிர்க்கொல்லி நோயும் இந்தியாவில் படு அச்சுறுத்தலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கருப்பு பூஞ்சை- இது மிகவும் அரிதான நோயாகக் கருதப்படுகிறது. இது கொரோனா நேரத்தில் மட்டுமல்ல பொதுவாகவே நீரிழிவு, எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் ஒரு நோய் பாதிப்பு. ஆனால் கொரோனா நேரத்தில் இந்த பாதிப்பு தற்போது இந்தியாவில் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் முதல் அலையில் 10% ஆக இருந்த இந்தப் பாதிப்பு தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அழுகிய காய்கறிகள், பழங்கள், மண், தாவரம், உரம் போன்றவற்றில் இருக்கும் ஒரு பூஞ்சை- மியூகோர்மைகோசிஸ். இது கருப்பு பூஞ்சை என அழைக்கப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்களின் திசுக்களைத் தாக்கி அவர்களின் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து விடுகிறது. அதுவும் நீரிழிவு போன்ற நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதுபோன்ற நபர்களை இந்த கருப்பு பூஞ்சை எளிதாகத் தாக்கி விடுகிறது.

இந்த பூஞ்சை மனித உடலுக்குள் புகும்போது மனிதர்களின் கண், மூக்கு, தொண்டை, நுரையீரல் போன்ற உறுப்புகளை தாக்கிப் பின்பு மூளைக்குள் சென்றுவிடும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இது மனித மூளையைத் தாக்கும்போது இயல்பாகவே அந்த நபர் இறந்து போகும் அவலமும் ஏற்படுகிறது. இதனால் கொரோனா நோயில் இருந்து மீண்ட நபர்கள் அதுவும் இணை நோயான நீரிழிவு நோய் உள்ளவர்கள் கருப்பு பூஞ்சை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நோய் தாக்கம்- தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இயல்பாகவே மனிதனின் சுவாச உறுப்பை தாக்கி நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் இயல்பு கொண்டது. இப்படி நுரையீரலில் வீக்கம் ஏற்படும்போது கொரோனா நோயாளிகளால் இயல்பாக சுவாசிக்க முடிவதில்லை. அதுவும் ஏற்கனவே நீரிழிவு போன்ற இணை நோய் கொண்டவர்களால் முற்றிலும் சுவாசிக்க முடியாமல் அவர்கள் உயிருக்குப் போராடும் நிலைமையும் ஏற்படுகிறது. இந்த நேரத்தில்தான் மருத்துவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளை அந்நோயாளிகளுக்கு கொடுக்கின்றனர்.

இந்த ஸ்டீராய்டு தான் தற்போது கருப்பு பூஞ்சை எனும் நோய்க்கு மூலக்காரணமாக மாறி இருக்கிறது. காரணம் இந்த ஸ்டீராய்டு நுரையீரலில் உள்ள வீக்கத்தை குறைத்து கொரோனா நோயாளிகளுக்கு எப்படி உதவுகிறதோ அதேபோல அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது. கூடவே அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளைவையும் குறைத்து விடுகிறது.

இப்படி நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவும் குறையும்போது இந்த கருப்பு பூஞ்சை அந்த நபரை எளிதாகத் தாக்கி குடிபுகுந்து கொள்கிறது.

அறிகுறிகள்- கண்வலி, கண் வீக்கம், காய்ச்சல், கன்னங்களின் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல், கண்பார்வை இழந்து போதல், மூக்கடைப்பு போன்றவை கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த கருப்பு பூஞ்சையானது கொரோனாவில் இருந்து மீண்ட 12-15 நாட்களுக்குள் வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் கொரோனா நோயில் மீண்டவர்கள் அதிலும் நீரிழிவு போன்ற நோய் உள்ளவர்கள் இதுபோன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

தடுக்கும் வழி- கருப்பு பூஞ்சை மனித திசுக்களில் புகுந்தவுடன் மூக்கு, கண் போன்ற உறுப்புகளை சிதைக்க ஆரம்பிக்கும். இதனால் சிதைத்த உறுப்புகளை மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றுகின்றனர். பெரும்பாலும் கருப்பு பூஞ்சை கண்களைத் தாக்குவதால் பெரும்பாலான நோயாளிகள் கண்களை இழக்கும் அவலமும் நடக்கிறது.

அடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கும் ஸ்டீராய்டு அளவு குறித்தும் மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். காரணம் தேவையான அளவு ஸ்டீராய்டு தேவையான நேரத்தில் கொடுக்கும்போது இதுபோன்ற பூஞ்சை தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் கொரோனாவில் இருந்து மீண்ட நீரிழவு நோயாளிகள் தொடர்ந்து அவர்களின் சர்க்கரை அளவை கண்காணிப்பது மிகவும் அவசியம். இப்படி கண்காணிக்கும்போது பூஞ்சை தொற்றை அதன் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடமுடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர்.

கருப்பு பூஞ்சை தொற்று தாக்கும்போது அவர்களுக்கு Ampho tericin-B எனும் மருந்து ஒன்றே தீர்வாக கருதப்படுகிறது. பூஞ்சை தொற்றுக்கு எதிராகச் செலுத்தப்படும் இந்த மருந்தின் விலை கிட்டத்தட்ட 5,000-6,000 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நோய்த் தாக்கிய நபர்களுக்கு இந்த மருந்தை வாரம் ஒன்று என தொடர்ந்து 6 வாரங்களுக்கு செலுத்தும்போது நோய் பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்து விடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றர். இதனால் கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் சர்க்கரை அளவு குறித்தும், கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள் குறித்தும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.