நடிகர் சங்க தேர்தலிலும் கள்ள ஓட்டா? மைக் மோகனால் ஏற்பட்ட பரபரப்பு!

நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகனின் ஓட்டை மர்ம நபர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டுவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்தலில் கள்ள ஓட்டு என்பது சர்வ சாதாரணமாக நடைபெறும் ஒரு நிகழ்வுதான். ஆனால் சுமார் 3000 வாக்காளர்களே உள்ள நடிகர் சங்கத்தில் அதிலும் பெரும்பாலும் பிரபலமானவர்கள் ஓட்டு போடும் ஒரு தேர்தலிலும் கள்ள ஓட்டு பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்ய இன்று காலை நடிகர் மைக் மோகன் வந்தார். ஆனால் அவரது பெயரில் வாக்கு செலுத்தப்பட்டு விட்டது என அதிகாரிகள் தெரிவித்ததால் நடிகர் மைக் மோகன் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

மோகன் ஒரு பிரபலமான நடிகர். அவரது ஓட்டை இன்னொருவர் போடும்போது எப்படி அது கவனிக்காமல் விடப்பட்டது என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என இரு அணியினர்களும் கூறி வரும் நிலையில் இதுபோன்ற தவறுகள் எப்படி நடந்தது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.