காஷ்மீர் தாக்குதலின் பதிலடிக்கு ஆதரவு அளிப்போம்: நடிகர் சங்கம் அறிக்கை

  • IndiaGlitz, [Sunday,February 17 2019]

காஷ்மீர் புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பு ஒன்று நடத்திய காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். மரணம் அடைந்த வீரர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் இரங்கல் தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.

இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

காஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீர்ர்களுக்கு கண்ணீர் அஞ்சலி. காஷ்மீர் புல்வாமாவில்
ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது . இந்த தாக்குதலில் நம் தேசம் காக்க காவல் புரிந்து வந்த ராணுவ வீரர்கள் பலியாகியது நெஞ்சை உறைய வைத்துள்ளது. வீரமரணமடைந்த வீரர்களுக்கு வீர வணக்கத்தோடு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த தாக்குதலுக்கு அரசு எந்த வகையில் பதில் அளித்தாலும், அதற்கு ஒட்டுமொத்த நாட்டுடன் நடிகர் சமூகமும் தென்னிந்திய நடிகர் சங்கமும் ஒற்றுமையுடன் ஆதரவளிக்கும் என்பதை தேச பக்தியோடு தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது