40 வருடங்களுக்கு பின் ரீமிக்ஸ் ஆகும் கமல் பட பாடல்

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்த இச்சாதாரி பாம்பு படமான 'நீயா' படம் குறித்து தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த படத்தின் பெயரை கூறியதும் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரு விஷயம் இந்த படத்தில் இடம்பெற்ற 'ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்' என்ற பாடல்தான். சுமார் 40 வருடங்கள் ஆகியும் இன்றும் இந்த பாடல் வானொலி, தொலைக்காட்சிகளில் ஒலித்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த பாடல் சங்கர் கணேஷ் இசையமைப்பில் கண்ணதாசன் எழுதிய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது தயாராகி வரும் 'நீயா 2' படத்தில் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து படக்குழுவினர் இணைக்கவுள்ளனர். இதற்காக முறைப்படி இந்த பாடலின் உரிமையை பெற்றுள்ள படக்குழு சமீபத்தில் இந்த பாடலை படமாக்கியதாகவும், இந்த பாடலுக்கு ராய்லட்சுமி நடித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

'நீயா 2' படத்தின் கதைக்கும் 'நீயா' படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் இந்த படத்தின் ஒரு காட்சியில் இந்த பாடல் பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால் இந்த பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் சமீர் தெரிவித்துள்ளார். ஜெய், ராய்லட்சுமி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.