கதறி அழ தினமும் பழகணுமா??? இப்படியொரு கொடூரச் சட்டம் கொண்ட நாடு!!!

 

உலகத்திலேயே வடகொரியா சில விசித்திரமான நடைமுறையும் கொடூரச் சட்டங்களையும் கொண்ட நாடாக இருந்து வருகிறது. அதிலும் உலகத்தின் பார்வையில் இருந்து தொடர்பே இல்லாமல் இருப்பதால் இந்நாட்டின் ஒவ்வொரு செயலும் உலகம் முழுவதும் விசித்திரமாகவே பார்க்கப் படுகிறது. அந்த வகையில் கொரோனா நேரத்தில் அந்நாட்டின் அதிபர் பிறப்பித்த சில விதிமுறைகள் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனாவை தன் நாட்டிற்குள் நுழைய விடக்கூடாது என முடிவெடுத்த அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஜனவரி மாதமே தன் நாட்டின் அனைத்து எல்லைகளையும் இழுத்து மூடினார். அதேபோல கடந்த ஜுலை மாதத்தின் இறுதியில் தென் கொரியாவின் எல்லைப் பகுதியில் கொரோனா பாதிப்பு இருக்கிறது எனக் கேள்விப்பட்ட அதிபர் கிம், தென் கொரியாவுடன் கடிதப் போக்குவரத்து உட்பட அனைத்து உறவுகளையும் முறித்து கொண்டார். மேலும் தென் கொரியாவில் இருந்து யாரேனும் வட கொரியாவிற்குள் நுழைய முற்பட்டால் எந்த வித விசாரணையும் இன்றி சுட்டுக் கொல்லப் படுவார்கள் என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

அப்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் தென் கொரியாவில் இருந்து வட கொரியாவிற்கு வந்த கப்பற்படை அதிகாரி ஒருவரை வடகொரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதனால் மக்கள் மத்தியில் கடும் பதட்டமும் அச்சமும் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா விதிமுறைகளை மீறினார் எனக் கூறி அந்நாட்டின் உயரிய பதவியில் இருந்த ஒருவர் நடுரோட்டில் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது கொரோனா நேரத்தில் வடகொரியா பிறப்பித்து இருக்கும் விதிமுறைகளை அனைவரும் சரியாக கடைப்பிடிக்க வேண்டும். ஒருவேளை மீறினால் சிறை தண்டனை உட்பட, மரணத் தண்டனை வரை விதிக்கப்படும். இந்த விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது என்பதுதான் அந்நாட்டின் எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் இருந்து அனுமதி பெறாமல் பொருட்களை இறக்குமதி செய்தார் என்பதற்காக அதிகாரி ஒருவர் நடுரோட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார் என்ற தகவலை Radio free Asia என்ற வானொலி உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேலும் அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் இந்த விதி பொருந்தும் என்பதையும் அதிபர் கிம் ஜாங் உன் தெளிவு படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதேபோல சில விசித்திர தகவலையும் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதாவது அந்நாட்டின் மக்கள் அனைவரும் கதறி அழுவதற்காக தினமும் பயிற்சி எடுத்துக் கொள்கின்றனர் என்ற தகவலை கூறி இருக்கிறது. எதற்காக மக்கள் கதறி அழ வேண்டும் என்ற அடுத்த கேள்வி எழலாம்.

வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங் உன்னின் குடும்பம்தான் கடந்த 3 தலைமுறைகளாக அந்நாட்டில் சர்வாதிகாரம் செய்து வருகிறது. கிம்மின் தாத்தா உயிரிழந்த பின்பு அவருடைய மகன் கிம் ஜாங் இல் பதவிக்கு வந்தார். இவர் பதவிக்கு வந்த உடன் தன்னுடைய அப்பாவிற்கு நாட்டின் அனைத்து மக்களும் 10 நாட்கள் வரை துக்கம் அனுசரிக்க வேண்டும். அப்படி துக்கமாக இருந்தால் மட்டும் போதாது. மக்கள் அனைவரும் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழ வேண்டும். இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்கா விட்டால் சிறை தண்டனை கிடைக்கும். ஒருவேளை இதையெல்லாம் கடைபிடிக்க முடியாது என முரண்டு பிடித்தால் அவர்கள் திடீரென காணாமல் போவார்கள். இப்படி பலர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

கிம்மின் தாத்தா கடந்த 2011 டிசம்பர் 17 ஆம் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து வடகொரிய மக்கள் அனைவரும் 10 நாட்கள் துக்கம் அனுசரித்து நெஞ்சில் அடித்து கொண்டு அழுதனர். இந்த வீடியோ உலகம் முழுவதும் பரபரப்பட்டது. அடுத்து கிம் ஜாங் இல் பதவி ஏற்றுக் கொண்டார். இவர் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து தொடர்ந்து 7 நாட்கள் வரை மக்கள் புதிய அதிபரை புகழ்ந்து வாழ்த்து சொல்ல வேண்டும். இத்தகைய கொடூர சட்டங்களுக்கு பயந்தே அந்நாட்டு மக்கள் தினமும் இதுபோன்ற பயிற்சியை எடுத்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.