நாளை முதல் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்காதா?

  • IndiaGlitz, [Tuesday,April 20 2021]

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் இரவு 8 மணிக்கு பிறகு அரசு மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஞாயிற்றுகிழமைகளில் முழுநேர ஊரடங்கும் அமலுக்கு வரவிருக்கிறது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரும்பாலும் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் பகலில் அதிகளவில் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்து இருந்தது. அத்துடன் கொரோனா பரவாத வண்ணம் ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்துகளை காக்க ஆறு மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி இருந்தார்,.

இந்நிலையில் தற்போது இரவுநேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூட ஆம்னி பேருந்துகளை இயக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கம் வெளியிட்டு இருக்கிறது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் எனவும் பயணிகள் மன்னித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி போக்குவரத்துறை அனைத்து போக்குவரத்துக் கழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.