இந்த தொகுதியில் ஜெயிக்கும் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும்....! 1957 முதல் 60 வருடங்கள் தொடரும் செண்டிமெண்ட்...!



வேடசந்தூர் தொகுதியில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ, அந்த கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்ற செண்டிமெண்ட் தற்போது வரை தொடர்ந்து வருவது மக்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது வேடசந்தூர் தொகுதி. கிட்டத்தட்ட 1957-ஆம் ஆண்டுமுதல் 60 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தின் ஆட்சியை தீர்மானிக்கிறது இந்த தொகுதிதான் என்று சொல்லலாம். இந்த தொகுதியில் வெற்றிபெறும் கட்சியோ அல்லது கூட்டணி கட்சியோ தான் ஒவ்வொரு முறையும் ஆட்சியை பிடிக்கிறது.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,28,834 நபர்கள், பெண் வாக்காளர்கள் 1,34,425 நபர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 நபர்கள் என மொத்தம் 2,63,262 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

கடந்த 1952- ஆம் ஆண்டு முதல் தற்போதைய 2021-ஆம் ஆண்டு வரை, இத்தொகுதி 16 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 1952-இல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக களமிறங்கிய மதனகோபால் வெற்றிபெற, எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தது. அதற்கு பிந்தைய 60 வருடங்கள் முழுவதும் வேடசந்தூர் தொகுதியில் வெற்றிபெறும் கட்சியே, சென்டிமெண்டாக ஆட்சி அமைத்து வருகின்றது.



இதையடுத்து 1957,1962 உள்ளிட்ட வருடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற, அப்போது காங்கிரஸ் தான் ஆட்சியும் அமைத்தது.

1967,1971 உள்ளிட்ட தேர்தல்களில் திமுக கூட்டணி அந்த தொகுதியில் வெற்றிபெற, திமுக தலைமையேற்றது.

1977,1980,1984-களில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற, அதிமுக தலைமை ஆட்சியமைத்தது.

1989-இல் திமுக கூட்டணி வெற்றிபெற திமுக ஆட்சியமைத்தது.

1991-இல் அதிமுக கூட்டணி வெற்றிபெற, அந்தவருடம் அதிமுக தலைமையேற்றது.



இதைத்தொடர்ந்து 1996-இல் திமுக, 2001-இல் அதிமுக, 2006-இல் திமுக, 2011 மற்றும் 2016 அதிமுக என மாறி மாறி எந்த கட்சி வேடசந்தூர் தொகுதியில் வெற்றிபெற்றதோ, அக்கட்சி தான் தமிழகத்தில் தலைமையேற்று ஆட்சி புரிந்தது.

செண்டிமெண்ட் தொகுதியாக விளங்கிவரும் வேடசந்தூர் தொகுதியில், நடப்பாண்டிலும் இதுவே தொடர்ந்துள்ளது.அதிமுக வேட்பாளர் விபிபி.பரமசிவத்தை எதிர்த்து களமிறங்கிய திமுக எஸ்.காந்திராஜன் தான் வேடசந்தூரில் 17,553 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

எஸ்.காந்திராஜன் - திமுக - 106,481 - 49.97%
விபிபி.பரமசிவம் - அதிமுக- 88,928 - 41.73%

இம்முறை திமுக தான் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளதால், இத்தொகுதியின் செண்டிமெண்ட் இன்னும் தொடர்ந்து வருகிறது.