தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமை நபர் சூர்யா; ரஜினி பட இயக்குனர்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் தங்கள் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என்பதை அவ்வப்போது பார்த்து வந்தோம். ஆனால் நடிகர் சூர்யாவின் நீண்ட அறிக்கை கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி கட்டுரை போன்று மிக ஆழமாக இருந்தது. இந்த சம்பவங்கள் நடப்பதற்கு யார் காரணம்? அப்படியே ஒருவேளை இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டால் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக குடும்பத்தினர்களும் சமூகமும் நடந்து கொள்ள வேண்டியது எப்படி? இப்படி ஒரு சம்பவமே இனிமே நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகர் சூர்யா தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் இந்த கருத்து திரையுலகினர்களிடம் இருந்து மட்டுமின்றி ஒவ்வொரு பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்களாலும் பாராட்டப்பட்டது. அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வந்தது.

இந்த நிலையில் ரஜினியின் 'கபாலி', 'காலா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் சூர்யாவின் இந்த கட்டுரை குறித்து கூறியபோது, 'தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமையான சூர்யா அவர்களே, உங்களுடைய பதிவு நம் காலத்துக்கு மிகவும் தேவையானது. ஒரு பெண் குழந்தையின் தகப்பனாக அவருடைய பயங்களோடும், எதிர்பார்ப்போடும் என்னால் ஒத்து போக முடிகிறது. சாதி, மதம் இரண்டுமே பெண்களுக்கு எதிரானது என்பதை உணர்வோம்'! என்று கூறியுள்ளார்.