வில்லனாக மாறிய கமல்ஹாசன் மச்சான்

  • IndiaGlitz, [Tuesday,July 21 2015]

உலக நாயகன் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பாபநாசம்' திரைப்படம், பாகுபலி' என்ற சுனாமியையும் தாண்டி நல்ல வசூலுடன் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வெற்றியால் சின்னச்சின்ன வேடங்களில் நடித்த நடிகர்களுக்கும் பெரிய புகழ் கிடைத்துள்ளது.


இந்நிலையில் இந்த படத்தில் கவுதமியின் தம்பியாகவும், கமல் மச்சானாகவும் நடித்த அபிஷேக் வினோத்துக்கும் பாபநாசம் வெற்றி ஒருசில வாய்ப்புகளை கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து அபிஷேக் வினோத் கூறியபோது, கமல்ஹாசன் அவர்களுடன் நடித்ததால், என்னை தமிழக ரசிகர்கள் நன்றாக அடையாளம் கண்டுகொண்டனர். எனக்கு பல வாய்ப்புகளும் தேடி வருகின்றன. அவருடன் நான் நடித்த காட்சிகள் குறைவுதான் என்றாலும், அந்த காட்சிகளை என் வாழ்நாளில் மறக்க முடியாது' என்று கூறியுள்ளார். மேலும் சேது, பிதாமகன் போன்ற படங்களில் விக்ரம் நடித்த கேரக்டர்கள் போல் நடிக்க ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக இருந்த இளங்கோ என்பவர் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் போலீஸ் உடையணிந்த வில்லன் வேடத்தில் நடிக்க அபிஷேக் வினோத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் அபிஷேக்கின் கேரக்டர் டுவிஸ்ட் மற்றும் திருப்பங்களை தரும் கேரக்டர் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் தொட்டால் தொடரும் படத்தில் நடித்த அருந்ததி நாயகியாக நடிக்கின்றார்.