close
Choose your channels

ரூ.20 லட்சம் கடனுக்காக ரூ.7 கோடி வீட்டை இழந்த பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்

Wednesday, November 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கந்துவட்டி கொடுமையால் நேற்று அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி வெளியானதும் அவரை போல இன்னும் பல திரையுலக பிரபலங்கள் கந்துவட்டி கொடுமையை அனுபவித்ததாக தெரிய வருகிறது. அஜித், கவுதம் மேனன், லிங்குசாமி உள்பட பல பிரபலங்கள் கந்துவட்டி கொடுமையை சந்திக்க நேர்ந்ததாக இயக்குனர் சுசீந்திரன் கூறியிருக்கையில் தற்போது இயக்குனர் பார்த்திபனும் ரூ.20 லட்ச கடனுக்காக இன்றைய மதிப்பில் ரூ.7 கோடி மதிப்புள்ள வீட்டை இழந்ததாக தனது கந்துவட்டி அனுபவத்தை கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது இதுதான்:

அன்பு நிறைந்த தயாரிப்பாளர்களுக்கு வணக்கம். அன்பு மட்டுமே நம்மை இணைக்கும் சக்தியாக இருக்கும். அசோக் குமாரின் மரணம் நம்ம சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. மனம் பிணமாய் கணக்கிறது. அசோக் குமார் போன்ற எமோஷனலாய், சென்ஸ்ட்டிவ்வாக முடிவு எடுக்ககூடிய மென்மையான மனிதர்கள் இனி இங்கே ஜீவிக்கவே முடியாது என்பதற்கு இந்த கொலை ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை தொடர்ந்தால் கந்துவட்டி மட்டுமே இங்கு ஜீவிக்கும்.  வெறும் கெட்டவர்கள் மட்டுமே இங்கே ஜீவிப்பார்கள். இவர்கள் வட்டி வசூலிக்கும் முறை ரொம்ப கொடுமையானது தண்டனைக்குரியது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பிரச்னையில் இருந்து நாம் எப்படி வெளியே வரவேண்டும் என்பதைதான்  இப்போது முதலில் யோசிக்க வேண்டும்.

இதில் இன்னொரு விஷயம் இருக்கு. நண்பர்கள் கூட கஷ்டப்படும் வேளையில் நமக்கு உதவி செய்வதில்லை. இந்த வட்டிக்கு விடுபவர்கள்தான் உதவுவார்கள். எங்க அம்மாவின் தாலியை அடகு வைக்கவில்லை என்றால் நான் படித்து இருக்க முடியாது. என்னை மாதிரி நிறையப் பேரும் இந்த அடகு கடைகள், வட்டிகாரர்களிடம் அவசரத்துக்கு பணம் கேட்டு வாங்கி நிறைய நேரங்களில் அவர்களின் வாழ்க்கையை ஓட்டி இருக்கிறார்கள். ஆனால்,  இப்படி தப்பான, கொடியவர்களிடம்தான் பணம் வாங்குறோம் என்ற நிலையை புரிந்து கொண்டு அதை வாங்கமால் இருக்க என்ன பண்ணுவது. ஒரு வேளை வாங்கி விட்டால் என்ன பண்ணுவது என்று யோசிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக வளரசவாக்கத்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள என் பங்களாவை விற்றேன். இன்று அதன் மதிப்பு ஏழு கோடி ரூபாய். வாங்கிவிடலாம், இன்னும் சரியான படம் பண்ணுனா நாளைக்கே வாங்கி விடலாம் என்று நினைத்து இன்றுடன் 13 வருஷம் ஆகிவிட்டது. இப்பவும் என் வாழ்க்கையில்  பெரிய தவறாக நினைப்பது அதைத்தான். ஆனால், மனசில் என்ன சந்தோஷம் என்றால், 'யாருக்கும் நம்ம ஒரு பத்து பைசா கூட பேலன்ஸ் வைக்கவில்லை'' என்பதுதான்.

சமீபத்தில் சேரன் ,  ''ஆபிஸை காலி பண்ண வேண்டிய சூழ்நிலை'' என்று. நான் உடனே ராத்திரி அவருக்கு போன் பண்ணி சொன்னேன். என் அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்னு. இதை தற்பெருமைக்காக சொல்லவில்லை. நான் இருப்பதே திருவான்மியூரில் வாடகைக்குத்தான். இதுவும் நண்பருக்கு நண்பர் உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். நாம் இன்று சொல்கிறோம். ''எந்த பிரச்னையாக இருந்தாலும் சங்கத்துக்கு வாங்க தீர்த்து வைக்கிறோம்'னு. ஒரு மனிதன் பிரச்னையில் இருக்கும் போது தீர்த்து வைக்க முடிகிறதா என்பது கேள்விக்குறியாகதான் இருக்கிறது. அந்த நேரத்தில் யார் உதவி செய்ய முன் வருகிறார் என்பது தெரியாமல்தான் இருக்கிறது.

ரொம்ப வருடங்களுக்கு முன்பு மதுரையில் அதிக கந்துவட்டி பெரிய பிரச்னையாக இருக்கும் போது, ஒரு கிராமத்தில் சின்ன பிள்ளைனு ஒரு அம்மா இந்த கந்துவட்டி பிரச்னையில் இருந்து அந்த கிராமத்தை காப்பற்றுவதற்காக சிறுக சிறுக பணத்தை பத்து பேரிடம் குறைந்த வட்டிக்கு வாங்கி அதிகமான பணத்தை வாங்கிய கந்துவட்டிக்காரர்களிடம் கொடுத்துவிட்டு, தான் உழைத்து உழைத்து அவங்க வாங்கிய வட்டி கடனை ஈடு செய்து கொண்டு இருந்தார்கள். இதற்காக அப்போது இருந்த பாரத பிரதமர் அந்த சின்ன பிள்ளை காலை தொட்டு வணங்கினார். அப்போதுதான் உலக அழகினு ஐஸ்வர்யாவை தேர்ந்தெடுத்த காலம்.  அந்த சின்னபிள்ளை அம்மாவை  நான் சென்னைக்கு வரவழைத்து இவங்கதான் உலக அழகினு சின்ன பிள்ளை அம்மாவுக்கு கீரிடம் எல்லாம் சூட்டினேன். அவ்வளவு பெரிய விஷயத்தை சாதித்து இருக்காங்க இந்த பெண்மணி.

இவ்வளவு பெரிய சங்கங்கள், வசதிகள் உள்ளவங்க நினைத்தால் இதை செய்ய முடியாதா... நிச்சயமாக செய்ய முடியும். அது அப்படித்தான், ஒப்பாரி வைப்பதற்காக வேண்டும்னா நம்ம கூட்டமாக கூட முடியும். இப்போது நான் கூட ஒரு சிரமத்தில் இருக்கிறேன் என்றால் அந்த சிரமத்தை போய் சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் போய் பேசுவதற்கு இன்னும் சிரமாக இருக்கிறது. யாரும் உதவி செய்வதற்கு முன் வரமாட்டார்கள். ஒரு பக்கம் இந்த மாதிரி. வட்டிக்கு பணம் வாங்கி நம்ம கொடுக்க முடியாமல் நம்மளை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி அந்த அவமானத்தில் தற்கொலை பண்ணிக்கொள்கிற நிலைமை.

என்னுடைய படத்தை வெளியிட்ட வகையில் திருச்சியில் இருந்து நாலரை லட்சம் ரூபாய் வரணும். பத்து மாதமாக போராடி ஒரு லட்சம் ரூபாய் வந்து இருக்கு. இன்னும் மூன்று லட்சம் ரூபாய் வருமா என்பது தெரியவில்லை. இதற்காக நான் வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், என் பணத்தை வாங்கிவிட்டு கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை அவங்க அதை இழுத்தடித்து கொண்டே இருக்குறாங்க. இதை சங்கத்தாலும் தீர்க்க முடியவில்லை. ஒருத்தன் பணத்தை கொடுத்துவிட்டு நம்மள டார்ச்சர் பண்ணுறான் இன்னொருத்தன் நம்மிடம் பணம் வாங்கி கொண்டு நம்ம பணத்தை தரமால் இழுத்து அடிக்கிறான். பிரச்னைகள் நெருக்கடிக்கும் போது ஒரு மனிதனால் மீளவே முடியவில்லை. நமக்கு ஒரு தைரியம் நம்ம நேற்று ஒன்றும் கொண்டு வரவில்லை. நாளைக்கு நம்ம எடுத்து போகபோறதும்  இல்லை என்று.

இன்னைக்கு இரவு இரண்டு மணிக்கு எழுந்து யோசித்து கொண்டு இருக்கிறேன். அதனால் கந்துவட்டி பிரச்னையில் இருந்து நம்ம தப்பிக்க ஒரே வழி நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்கிற கூட்டுறவு அமைப்பு. அந்த அமைப்பில் இருந்து ஒருவருடைய  சிரமத்துக்கு இன்னொருவர் எப்படி உதவலாம் என்று யோசிக்க வேண்டும். ஒருத்தன் நல்லா இருந்தால் மட்டுமே அந்த கடனை திருப்பி கொடுக்க முடியும். இல்லை என்றால் கடனை திருப்பி கொடுக்க முடியாது. அதனால் இந்த கந்துவட்டி கொடுமையில் இருந்து நம்ம வெளியே வர நம்ம எல்லோரும் சேர்ந்து பேசி எதாவது ஒரு முடிவுக்கு வரணும். இனியாவது இந்த மாதிரி ஒரு பலி ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்''

இவ்வாறு பார்த்திபன் ஒரு ஆடியோ செய்தியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.