மெர்சலுக்கே இப்படின்னா 'பராசக்தி' இன்று வந்திருந்தால்? ப.சிதம்பரம்

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

தளபதி 'மெர்சல்' படம் வெற்றி பெற்றதற்கு விஜய் ரசிகர்களை விட இலவச புரமோஷன் செய்து வரும் அரசியல்வாதிகளுக்குத்தான் உண்மையில் 'மெர்சல்' படக்குழுவினர் நன்றி கூற வேண்டும். குறிப்பாக பாஜகவினர் எதிர்ப்பு காரணமாக இந்த படத்தை பார்க்க விருப்பமில்லாமல் இருந்தவர்கள் கூட பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் படத்திற்கு மேலும் வரவேற்பு அதிகரித்துள்ளது.

'மெர்சல்' படம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப.சிதம்பரம் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

'அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம் என்றும், மெர்சலுக்கே பாஜகவினர் இப்படி பயப்படுகிறார்கள் என்றால் 'பராசக்தி' படம் இன்று வெளியாகியிருந்தால் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய 'பராசக்தி' திரைப்படம் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல்படம் என்று கூறலாம்.