தலைமுடியை விற்ற பணத்தில் தற்கொலை முயற்சி: 3 குழந்தைகளின் தாய்க்கு குவிந்த உதவி

  • IndiaGlitz, [Thursday,January 09 2020]

வறுமையின் கொடுமையில் சிக்கிய மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் தனது தலைமுடியை விற்று மூன்று குழந்தைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுத்து மீதி உள்ள காசில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற நிலையில் அவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார். தற்போது அவருடைய பிரச்சினைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தி பரவி வருகிறது.

சேலம் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் செல்வம் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த பின் மூன்று குழந்தைகளுக்கும் தேவையான சாப்பாடை கூட வாங்கிக் கொடுக்க முடியாமலும் கடன்காரர்களின் நெருக்குதல் காரணமாகவும் அவர் தற்கொலை முடிவுக்கு வந்தார்

ஆனால் தற்கொலை செய்ய விஷம் வாங்க கூட அவரிடம் பணம் இல்லை. எனவே அவர் கோயிலுக்குச் சென்று தனது தலைமுடியை மொட்டை அடித்து அந்த தலைமுடியில் கிடைத்த ரூபாய் 150க்கு 3 குழந்தைகளுக்கும் வயிறார சாப்பாடு வாங்கிக் கொடுத்தார். பின்னர் மீதமிருக்கும் பணத்தில் விஷம் வாங்கி தற்கொலைக்கு திட்டமிட்ட போது தான் அவர் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளிவந்தன நிலையில் அவருக்கு உதவிகள் குவிந்தது. பலர் ஆயிரக்கணக்கில் பணம் அனுப்பியதால் தற்போது அவரிடம் ஒரு லட்ச ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அவருடைய இரண்டு குழந்தைகள் படிப்பதற்கு தேவையான உதவிகளும் கிடைத்து விட்டதாகவும் அரசும் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது.

தற்போது கிடைத்த பணமே தனக்கு போதும் என்றும் இனிமேல் யாரும் தனக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்றும் இந்த பணத்தை வைத்து நான் ஒரு தள்ளுவண்டியில் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தில் மீது கடனை அடைத்து விடுவேன் என்றும் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.