close
Choose your channels

அன்னாசி பழத்திற்குள் வெடிகுண்டு: கர்ப்பிணி யானையை கொலை செய்த கிராம மக்கள்

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அன்னாசி பழத்திற்குள் வெடிகுண்டு வைத்து கர்ப்பிணி யானையை கிராமத்து மக்கள் கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் பாலக்காடு என்ற பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் கர்ப்பிணி யானை ஒன்று ஊருக்குள் வந்தது. இந்த யானையால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பயந்த அந்த கிராமத்தினர் அன்னாசிப்பழம் ஒன்றுக்குள் வெடி மருந்தை வைத்து அந்த யானைக்கு சாப்பிடக் கொடுத்தனர். பசியுடன் இருந்த அந்த கர்ப்பிணி யானை அந்த பழத்தை சாப்பிட்ட உடன் வயிற்றுக்குள் போன வெடி மருந்து வெடித்தது துடிதுடித்து இறந்தது. அதன் வயிற்றிலிருந்த குட்டியும் இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி மோகன கிருஷ்ணன் என்பவர் தனது முகநூலில் மிகவும் சோகத்தோடு பதிவு செய்திருப்பதாவது: அவள்(கர்ப்பிணி யானை) அங்குள்ள அனைவரையும் நம்பினாள். அவள் சாப்பிட்ட அன்னாசிப்பழம் வெடித்தபோது கண்டிப்பாக அதிர்ச்சியடைந்திருப்பாள். ஏனென்றால் அவள் இன்னும் 18 முதல் 20 மாதங்களில் ஒரு குழந்தையைப் (குட்டியை) பெற்றெடுக்கப் போகிறாள். அவள் வாயில் வெடித்த வெடிமருந்து மிகவும் சக்தி வாய்ந்தது. அவளது வாயும், நாக்கும் மிகவும் மோசமாக காயமுற்றிருந்தன. வலியுடன் அவள் கிராமத்தை சுற்றி வந்திருக்கிறாள். ஆனால், அவள் வாயில் ஏற்பட்ட காயத்தால் எதுவும் சாப்பிடவும் முடியவில்லை. தாங்க முடியாத கொடூர வலியிலும், அவள் கிராமத்தில் யாரையும் சிறிதளவு கூட துன்புறுத்தவில்லை. எந்த இடத்திலும் கொஞ்சம் கூட சேதம் விளைவிக்கவில்லை. ஆம், அதனால்தான் சொல்கிறேன். அவள் மிகவும் நல்லவள். இறுதியில் தாங்க முடியாத வலியை சமாளிக்க வெள்ளியாறு நதிநீரில் இளைப்பாறினாள். அவளது வயிற்றில் ஏற்பட்ட காயங்களில் வந்து அமரும் ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளைத் தவிர்ப்பதற்காக கூட இதைச் செய்திருக்கலாம். தனது வாயையும், தந்ததையும் நீரில் மூழ்கியபடி அவள் நின்றிருந்தாள்.

நதியில் இருந்து அவளைக் காப்பாற்ற சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் எனும் இரண்டு யானைகளை அழைத்து வந்தோம். ஆனால் அவளுக்கு ஆறாவது உணர்வு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். உயிரை விடப்போகிறோம் என்று தெரிந்ததோ என்னவோ, அவள் எங்களை எதுவும் செய்ய விடவில்லை. அதனை பார்த்து எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. உடன் வந்த யானைகளும் அவளைப் பார்த்து கண்ணீர் விட்டன. பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, மே 27 மாலை 4 மணியளவில் உயிரிழந்த நிலையில் அவளை மீட்டோம்.

ஒரு லாரியின் மூலமாக அவளை காட்டுக்குள் கொண்டு சென்று அவள் விளையாடிய நிலத்தில் படுக்க வைத்து, அவள் மீது விறகு வைத்து தகனம் செய்தோம். அவளது முகத்தில் உள்ள வலியை எங்களால் உணர முடிந்தது. அவளுக்கு மிகுந்த மரியாதையுடன் அனைவரும் பிரியாவிடை அளித்திருக்க வேண்டும். அவள் முன் நாங்கள் தலைகுனிந்து இறுதி மரியாதை செலுத்தினோம். ஒரு மனிதனாக நான் அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.