சூரியகுமார் யாதவிற்கு பிறந்தநாள்… படு வித்தியாசமான பரிசு கொடுத்த சக வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேனாக தொடர்ந்து பல போட்டிகளில் கலக்கி வருபவர் சூரியகுமார் யாதவ். இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் அணியில் தேர்வாகி உள்ளார். இதனால் சூரியகுமார் யாதவ் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தனது 31 ஆவது பிறந்தநாளை இன்று சூரியகுமார் யாதவ் கொண்டாடி வருகிறார். மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி வரும் இவருக்கு சக வீரரான பிரிதிவ் ஷா ஒரு வித்தியாசமான பரிசை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சூரியகுமார் யாதவ் ஒரு பெண்ணைப் போல இரட்டை ஜடை போட்டுக்கொண்டு தாடியுடன் வித்தியாசமாகக் காட்சி அளிக்கிறார்.

ஜெண்டர் ஸ்வாப் பில்டரை வைத்து உருவாக்கப்பட்ட இந்த இமேஜுடன் “ஹேப்பி பர்த் டே சூரியகுமார் யாதவ்” என்ற வாசகத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும் ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் இமோஜி, ரெட் ஹார்ட் இமோஜிகளையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். சூரியகுமார் யாதவிற்கு சிறந்த நண்பராக இருந்துவரும் பிரிதிவ் ஷா பகிர்ந்த இந்த பரிசு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சூரியகுமார் யாதவிற்கு இவரைத் தவிர இந்தியக் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். கூடவே சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலும் “SKY’s the limit! Happy birthday to Indian star Suryakumar Yadav“ என்று வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கும் இவரது விளையாட்டை பார்க்க ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூடவே டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவரது பங்களிப்பு குறித்து மூத்த வீரர்கள் பலரும் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.