நடிகை பிரியங்கா சோப்ராவின் 39ஆவது பிறந்தநாள்… இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,July 20 2021]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை, தற்போது ஹாலிவுட்டில் பிரபலமானவர், டைம்ஸ் இதழ் வெளியிட்ட உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவர், ஃபோர்ப்ஸ் தேர்ந்தெடுத்த உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர் என இப்படி உலகப் பிரபலமாக மாறிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஜுலை 18 ஆம் தேதி தனது 39ஆவது பிறந்தநாளை லண்டனில் மிக எளிமையாகக் கொண்டாடி இருக்கிறார்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது அவருடைய கணவர் நிக் ஜோனாசும் உடன் இருந்தார். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றன. நடிகை பிரியங்கா சோப்ரா பீகார் மாநிலம் ஜம்ஷெத்பூரில் கடந்த 1982 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் தேதி பிறந்தவர். இவர்களுடைய பெற்றோர் மது சோப்ரா மற்றும் அசோக் ஆகிய இருவரும் இராணுவத்தில் மருத்துவர்களாக பணிபுரிந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லி, சண்டிகர், அம்பாலா, லடாக், லக்னோ, பரேலி, புனே எனப் பல இடங்களில் வசித்துவந்த இவர் தனது 13 ஆவது வயதில் அமெரிக்காவில் பள்ளிப் படிப்பை துவங்கினார். அங்கு நிறம் காரணமாக பல இடங்களில் அவமதிப்புக்கும் ஆளானார். இதையெல்லாம் பொருட்படுத்தாத நடிகை பிரியங்கா அங்குள்ள நியூட்டன், மாசசூசெட்ஸ் பள்ளிகளில் தனது படிப்பை தொடர்ந்தார். அதே நேரத்தில் நாடக தயாரிப்புகளிலும் ஈடுபட ஆரம்பித்தார். அப்போதே மேற்கத்திய பாரம்பரிய இசை மற்றும் பாடல்களைப் பாடத் துவங்கிய இவர் 3 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார்.

 இதையடுத்து பரேலியில் உள்ள இராணுவப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். இந்தத் தருணத்தில்தான் உள்ளூர் “மே ராணி“ எனும் அழகுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற நடிகை பிரியங்கா பின்னர் “ஃபெமினா மிஸ் இந்தியா“ அடுத்து கடந்த 2000 இல் “மிஸ் இந்தியா“ பட்டங்களை வென்றார். இதனால் சினிமா வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன.

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிக்க விரும்பிய பிரியங்கா பின்னர் கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதே படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து “உள்ளத்தை கொல்லாதே“ என்ற பாடலையும் அவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் பாலிவுட் சினிமா அறிமுகமான அவர் ஆண்டாஸ்(2003), முஜ்ஸே ஷாதி கரோகி (2004), கிரிஷ், டான், காமினி (2009), 7கூன் மாஃப் (2011), பார்பி (2012), மேரி கோம், தில் தடக்னே டோ, பாஜிராவ் மஸ்தானி எனப் பல ஹிட் படங்களிலும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களிலும் நடித்து இந்திய நட்சத்திரங்களில் முக்கியமான ஒருவராக மாறினார்.

பின்னர் ஹாலிவுட்டுக்குத் தாவிய இவர் கடந்த 2015 முதல் குவாண்டிகோ த்ரில்லர் கதையில் நடித்து பிரபலமானார். அதேபோல  “தி ஸ்கை இஸ் பிங்க்“ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து தற்போது ஹாலிவுட் சினிமாக்களும் முத்திரை பதித்து இருக்கிறார். 

நடிகை பிரியங்கா பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நடிகை பிரியங்கா நியூயார்க்கில் “சோனா” எனும் பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். கூடவே “அன்ஃபினிஷ்டு ஸ்டோரி” எனும் பெயரில் தனது திரை அனுபவங்களைப் புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளார்.

சினிமாவைத் தவிர நடிகை பிரியங்கா தயாரிப்பு மற்றும் பாடல்கள் பாடுவது போன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பெண்கள், சுற்றுச்சூழல் போன்ற சமூக விஷயங்களுக்காகவும் நடிகை பிரியங்கா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அந்த வககையில் கடந்த 2006 முதல் யுனிசெஃப்பின் உறுப்பினராக பணியாற்றி வரும் இவர் கடந்த 2016 முதல் குழந்தை உரிமைக்களுக்கான தேசிய உலகளாவிய யுனிசெஃபின் தூதராகவும் பணியாற்றி வருகிறார்.

தமிழ், பாலிவுட், ஹாலிவுட் என ரவுண்டு கட்டி கலக்கிவரும் இவரது நடிப்பை பாராட்டி 2 முறை தேசிய விருது வழங்கப்பட்டு இருக்கிறது. 5 முறை ஃபிலிம்பேர் விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். அதேபோல கடந்த 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நடிகை பிரியங்கா தனது 39 ஆவது பிறந்தநாளை தனது கணவர் நிக் ஜோனாசுடன் மிக எளிமையாகக் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகின்றன.