விளம்பர பிரியரா ராகவா லாரன்ஸ்?

  • IndiaGlitz, [Wednesday,March 08 2017]

பிரபல நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகள் பலருக்கு ஆதரவு கொடுத்து அவர்களுக்கு கல்வி, உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இடது கை செய்யும் உதவியை வலது கை அறியாமல் எத்தனையோ ஆயிரம் பேர் உதவி செய்து வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் மட்டும் தான் செய்யும் ஒவ்வொரு உதவியையும் புகைப்படத்துடன் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். இன்று கூட தனது ஆதரவில் பத்தாம் வகுப்பு படிக்கும் அய்யப்பன், ராகுல் ஆகிய இரு மாணவர்களும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துங்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை ராகவா லாரன்ஸ் செய்துள்ளார். ராகவா லாரன்ஸ் ஒரு விளம்பர பிரியரா? ஏன் இந்த விளம்பரம், இந்த விளம்பரத்திற்கு பின்னணி நோக்கம் ஏதேனும் உள்ளதா? என்று ஒருசிலர் நினைக்கலாம்
ஆனால் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை யோசிக்க வேண்டும். பெற்ற குழந்தையையே ஒருசிலர் கவனிக்காமல் விட்டுவிடும் இந்த காலத்தில், ஆதரவற்ற ஒரு குழந்தையை சிறுவயது முதல் தத்தெடுத்து வளர்த்து அவர்களை ஆளாக்குவது என்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த ஆக்கபூர்வமான விஷயத்தை செய்து வரும் ராகவா லாரன்ஸ் விளம்பரப்படுத்துவது ஏன் எனில், அவரை பார்த்து அவருடைய ரசிகர்களோ, நண்பர்களோ அல்லது வேறு யாரேனுமே ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற நல்லெண்ணத்தில்தான் அவர் விளம்பரம் செய்வதாக எடுத்து கொள்ள வேண்டும்
இந்த நல்ல விஷயம் நாட்டில் உள்ள அனைத்து வசதி படைத்தவர்கள் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினால், இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளே இல்லை என்ற சூழ்நிலை ஏற்படும் வாய்ப்பு இருக்கின்றது. இப்படி ஒரு நிலை ஏற்படுத்த விரும்பியே ராகவா லாரன்ஸ் தன்னுடைய உதவிகளை விளம்பரப்படுத்துகிறார் என்றால் அவர் விளம்பரப்படுத்துவதிலும் தவறு இல்லை, அவரை விளம்பர பிரியர் என்று கூறுவதிலும் தவறில்லை. அவருக்கும் அவருடைய விளம்பரத்திற்கு நமது வாழ்த்துக்கள்