சபாஷ் சரியான போட்டி.. ரஜினியின் அடுத்த பட சம்பளம் 300 கோடி ரூபாயா?

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 171’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் ’தலைவர் 172’ மற்றும் ’தலைவர் 173’ ஆகிய திரைப்படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்து விட்டதாகவும் இந்த படங்களுக்கு ரஜினிக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ’தலைவர் 171’ படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களை வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் மற்றும் தில் ராஜு தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் தில் ராஜூ தயாரிக்க இருக்கும் திரைப்படத்திற்கு ரஜினியின் சம்பளம் 300 கோடி ரூபாய் என்று கூறப்படுவது திரை உலகினர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தை தயாரித்தவர் தான் தில் ராஜு என்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் ‘தளபதி 69’ படத்திற்கு 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்க போவதாக கூறப்படும் நிலையில் ரஜினிக்கு 300 கோடி சம்பளம் என்பது சபாஷ் சரியான போட்டி என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் திரையுலகில் உள்ள விவரமானவர்கள் கூறிய போது ’ஒரு யூடியூப் சேனல் மற்றும் சில சப்ஸ்கிரைபர்கள் இருந்து விட்டால் தங்கள் இஷ்டத்துக்கு நடிகர்களின் சம்பளம் குறித்த தகவல்களை அடித்து விடுகின்றனர் என்றும், ஒரு நடிகரின் சம்பளம் எவ்வளவு என்பது சம்பந்தப்பட்ட நடிகர் மற்றும் தயாரிப்பாளருக்கு மட்டுமே தெரியும் என்றும் உண்மையான தொகை வெளியே தெரிய வாய்ப்பில்லை என்றும் கூறி வருகின்றனர்.

மேலும் தற்போது ஒரு நடிகரின் திரைப்படம் எந்த அளவுக்கு வசூல் செய்கிறது என்பதை விட ஒரு நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது தான் ரசிகர்கள் மத்தியில் போட்டியாக இருக்கிறது என்றும் அதனால் தான் இது போன்ற தகவல்கள் பரவி வருகிறதாகவும் கூறி வருகின்றனர்.