நடிகர் சங்க கட்டிட அடிக்கல் நாட்டு விழா தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதவியேற்ற நாசர் தலைமையிலான இளைஞர்கள் அணி, கடந்த சில மாதங்களில் பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இந்த் வகையில் மிக முக்கிய வாக்குறுதியான நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது மட்டும் அறிவிப்பு மட்டும் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
இந்த நிலையில் இன்று கூடிய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு மார்ச் 31ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய செயற்குழு கூட்டத்தில் நாசர், விஷால், பொன்வண்ணன், பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்திற்கு சொந்தமான 19 கிரவுண்ட் நிலத்தில் சுமார் 26 கோடி செலவில் 4 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட கட்டிடமாக நடிகர் சங்க கட்டிடம் அமையவுள்ளது. 1000 பேர் அமரும் அரங்கம், திருமண மண்டபம், ப்ரிவியூ திரையரங்கம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பல அம்சங்கள் இக்கட்டிடத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த கட்டிடத்திற்கான அனுமதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இருந்து தற்போது கிடைத்துவிட்டதால் அடிக்கல் நாட்டும் விழாவின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு ரஜினி, கமல் உள்பட அனைத்து உறுப்பினர்களையும் அழைப்பது மட்டுமின்றி 23 திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகளை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.