'என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை': தன்னுடைய செய்திக்கு டுவிட் போட்ட ராஷ்மிகா!

ஊடகங்களில் வெளியான தன்னுடைய செய்தியை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் ’இந்த செய்தியை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை’ என ராஷ்மிகா மந்தனா பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் விஜய்யுடன் ’வாரிசு’ என்ற படத்திலும் தெலுங்கில் துல்கர் சல்மானுடன் ’சீதாராமன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் ஹிந்தியில் இரண்டு படங்களிலும்’ நடித்து வருகிறார். இதனால் சென்னை, ஐதராபாத், மும்பை என விமானத்தில் படப்பிடிப்புக்காக பறந்து கொண்டிருக்கிறார்

இந்த நிலையில் ராஷ்மிகா படப்பிடிப்புக்காக விமானத்தில் செல்லும்போது தன்னுடைய செல்ல நாய்க்குட்டியை எடுத்து செல்வதாகவும், அந்த நாய்க்குட்டிக்கான விமான டிக்கெட்டை தயாரிப்பாளரே எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின

இந்த செய்தியை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய ராஷ்மிகா மந்தனா, ‘ நீங்கள் என் நாய் குட்டியை என்னுடன் விமானத்தில் பயணிக்க சொன்னாலும் அது பயணம் செய்யாது. அது ஐதராபாத்தில் என்னுடைய வீட்டில் சந்தோஷமாக உள்ளது. இந்த செய்தியை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் இந்த செய்தியால் உங்களுடைய நாள் மகிழ்ச்சியான நாளாக மாறியதற்கு எனது மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.