நாடக ஒத்திகையில் விபரீதம்… 10 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!

  • IndiaGlitz, [Monday,August 02 2021]

பகத்சிங் தூக்கிலடப்படுவதைப் போன்று ஒத்திகை பார்த்த 10 வயது சிறுவன் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தானே தூக்கிலிட்டுக் கொண்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் புதான் எனும் மாவட்டத்தில் உள்ள குன்வர்கான் கிராமத்தில் சிறுவர்கள் சிலர் நாடக ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத்தின விழாவிற்காக பகத்சிங் பற்றிய நாடகம் அரங்கேற இருந்தது. இந்த நாடகத்தில் பகத்சிங் வேடத்தில் சிவம் எனும் 10 வயது சிறுவன் நடிக்க இருந்தார்.

இந்நிலையில் சிறுவர்களோடு சேர்ந்து நாடக ஒத்திகையில் ஈடுபட்டபோது சிவம் தனது கழுத்தில் கயிற்றை மாட்டிக்கொண்டு நாற்காலி மேல் நின்றிருக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த நாற்காலி இடறி விழுந்திருக்கிறது. இதனால் சிவன் கயிற்றில் தொங்க ஆரம்பித்ததோடு அவரது கழுத்தும் இறுகி இருக்கிறது. இதனால் பதறிப்போன மற்ற சிறுவர்கள் பெற்றோர்களை அழைப்பதற்குள் சிறுவன் சிவம் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.