close
Choose your channels

உக்ரைன் போர்: புடின் எடுத்துள்ள மோசமான முடிவால் கலங்கும் பொதுமக்கள்!

Tuesday, March 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஷ்யா இராணுவம் உக்ரைன் நாட்டின் மீது மோசமான போரை நடத்திவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது துருக்கியில் 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் புடின் எடுத்துள்ள முக்கிய முடிவு குறித்த தகவல் உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

உக்ரைன் நேட்டாவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அங்குள்ள டோனஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளை சுதந்திர நாடுகளாக அறிவித்தது. தொடர்ந்து உக்ரைன் நாட்டின்மீது கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் மோசமான இராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்குப் பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்து நெருக்கடி கொடுத்தன.

மேலும் அமெரிக்கா புடினை போர்க் குற்றவாளியாக அறிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இப்படி பல்வேறு நெருக்கடி கொடுக்கப்பட்டாலும் புடின் உக்ரைன் மீதான போரைக் கைவிடுவதாக இல்லை. இந்நிலையில் உக்ரைனை முழுமையாகத் தற்போது ஆக்கிரமிக்க முடியாது என்று புடின் கருதுவதாகவும் இதனால் கொரியாவை போன்று வடகொரியா, தென்கொரியா என இரண்டாக உக்ரைனை பிரித்து விடலாம் என்றும் முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின்மீது போர்த்தொடுத்த ரஷ்யா அந்நாட்டின் கிரீமியாவைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. பின்னர் அந்தப் பகுதிக்குள் வாக்கெடுப்பை நடத்தி தனி நாடாகவும் அறிவித்தது. தொடர்ந்து அந்தப் பகுதிக்குள் உக்ரைனின் நாணயங்களை கைவிட வலியுறுத்தியது. ஆனால் கிரீமியாவின் தனிச் சுதந்திரத்தை இதுவரை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

தற்போது உக்ரைனினின் கிழக்குப் பகுதிகளான டோனஸ்க், லுகான்ஸ்க் மற்றும் தெற்குப் பகுதியின் சில நகரங்களை இணைந்து தனித்த சுதந்திர நாடுகளாக அறிவிக்கும் முடிவில் புடின் இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி நடக்கும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள மக்கள் ரஷ்யா சார்பாக ஏற்படுத்தப்படும் புதிய ஆட்சி அமைப்பிற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.