ரஜினி கட்சியில் அஜித், விஜய் இணணந்தால்....எஸ்.வி.சேகர்

  • IndiaGlitz, [Saturday,June 24 2017]

அரசியல் களத்தில் ரஜினியுடன் அஜித், விஜய் இணைந்தால் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.வி.சேகர் மேலும் கூறியதாவது: அரசாங்க பணத்தை, பொதுமக்கள் பணத்தை திருட வேண்டிய இடத்தில் ரஜினி இல்லை. ஏன் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது? இன்று ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதுன்னு ஊளையிடுபவர்கள் அனைவரும் ஒருகாலத்தில் சைக்கிளில் போனவர்கள் தானே!

நதிநீர் இணைப்பிற்கு ரஜினி ஒருகோடி ரூபாய் ஏன் கொடுக்கவில்லை என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு பதில்தான். நீங்கள் நதிநீர் இணைப்பு திட்டத்தை ஆரம்பித்தால் முதலில் கொடுக்கும் பணம் என் பணமாகத்தான் இருக்கும் என்று ரஜினி கூறினார். நதி நீர் இணைப்பை ரஜினி செய்வதற்கு அவர் என்ன அரசாங்கமா?.

நதிநீர் இணைப்பிற்கு ஒருகோடி ரூபாய் கொடுங்கள் என்று கூறும் அய்யாக்கண்ணு, ஒருவேளை அவர் ஒரு கோடி உடனே கொடுத்துவிட்டால் பாக்கி பணத்தை அய்யாக்கண்ணு அவர் வீட்டில் இருந்து எடுத்து கொடுப்பாரா? ரஜினியை பார்த்து போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசையில் அவ்ர் வீட்டுக்கு சென்று போட்டோ எடுத்து கொண்ட அய்யாக்கண்ணு, வெளியே வந்து விளம்பரம் செய்கிறார்.

அரசியலையே பிழைப்பாக நடத்துபவர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு எந்த அருகதையும் கிடையாது. ரஜினி அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். ஆனால் கிங் ஆக வருவாரா? அல்லது கிங் மேக்கராக வருவாரா? என்பது நமக்கு தெரியாது.

நாளை ரஜினி அரசியலுக்கு வந்து, விஜய்யையும், அஜித்தையும் அழைத்து பேசி, மூவரும் இணைந்து நல்லாட்சி கொடுக்க முடியாதா? சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு இவர்கள் யார்?

இவ்வாறு நடிகர் எஸ்.வி.சேகர் ஆவேசமான கருத்துக்களை அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.