விஜய் விஷயத்தில் நான் செய்த தவறு: மனம் திறக்கும் எஸ்.ஏ.சி

  • IndiaGlitz, [Sunday,November 08 2020]

தளபதி விஜய் மற்றும் அவரது தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் ஆகிய இருவருக்குமான அரசியல் பிரச்சினை குறித்த செய்திகள் கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் அளித்த பேட்டியில் ’நான் செய்த மிகப்பெரிய தவறு ஒன்றும் உள்ளது என்று மனம் திறந்து கூறியுள்ளார். புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் என்பவருக்கு மாநில பொறுப்பாளர் என்ற பதவி கொடுத்தேன். அவர் ஏற்கனவே புதுச்சேரியில் எம்எல்ஏவாக இருந்தார். அதன் பின்னர் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார் என்பது வேறு விஷயம். அந்த இடத்தில் தான் நான் தவறு செய்தேன். புஸ்ஸி ஆனந்த் என்ற ஒரு அரசியல்வாதியை விஜய் மக்கள் இயக்கத்தில் கொண்டு வந்து விட்டது தான் என்னுடைய தவறு. அவர் விஜய் ரசிகராக இல்லாமல், ஒரு அரசியல்வாதி ஆகவே செயல்பட ஆரம்பித்தார் என்று எஸ்.ஏ.சி குற்றம் சாட்டினார்

தமிழகத்தில் மொத்தம் 37 மாவட்டங்கள் தான் உள்ளன. 37 மாவட்டங்களில் 37 மாவட்ட தலைவர்கள் தான் இருக்க வேண்டும். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தில் 200 மாவட்டத் தலைவர்கள் இருந்தனர். இவர்களில் புஸ்ஸி ஆனந்த் 150 பேர்களை நியமனம் செய்தார். அவர்களை விஜய்யிடம் அழைத்துச் சென்று போட்டோ எடுக்கவும் செய்தார். அதன் பின்னர் உனக்கு பதவியும் வாங்கி கொடுத்து உள்ளேன் விஜய்யுடன் போட்டோவும் எடுக்க செய்துள்ளேன், அதனால் நீ நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என்று அந்த 150 பேர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்

விஜய்க்கு வெளியே நடப்பது எதுவுமே தெரியாத வகையில் ஒரு இரும்பு கோட்டையில் கொண்டுபோய் ஒரு சிலர் அவரை வைத்துவிட்டனர். விஜய் தனது மக்கள் இயக்கத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இந்த குழப்பங்கள் நடந்திருக்காது என்றும் எஸ்.ஏ.சி தெரிவித்தார்.

மேலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு சில மாவட்ட தலைவர்கள் இரண்டு பெரிய கட்சிகளிலும் பணம் வாங்கிக்கொண்டு இரண்டு கட்சிகளுக்கும் வேலை செய்தனர். விஜய்க்கு விசுவாசமாக இல்லாமல் விஜய் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதில் குறியாக இருந்தனர் என்று எஸ்.ஏ.சி கூறினார்

மேலும் ஒரு காலத்தில் விஜய் அவர்களுக்காக நான் பல முயற்சிகள் செய்தாலும் ஒரு கட்டத்தில் அவருக்கே நல்ல கதையை தேர்வு செய்யும் பக்குவம் வந்துவிட்டது. அதன்பின்னர் நான் ஒதுங்கிவிட்டேன். நான் விஜய்யுடன் 5 வருடமாக பேசவில்லை என்று ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் நான் கடந்த 15 வருடமாக விஜய்யிடம் தேவை இருந்தால் மட்டுமே பேசுவேன் என்று எஸ்.ஏ.சி தெரிவித்துள்ளார்.