கொரோனாவால் பாதிக்கப்பட்ட சகாயம் ஐஏஎஸ் –க்கு 8 ஆவது நாளாக தீவிரச் சிகிச்சை!

  • IndiaGlitz, [Tuesday,April 13 2021]

தமிழக மக்களிடையே நேர்மையால் பாராட்டப் பெற்றவர் சகாயம் ஐஏஎஸ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். மேலும் இவர் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்ப்பார்ப்பு கடந்த சில ஆண்டுகளாகவே இளைஞர் மத்தியில் இருந்து வந்தது. இந்த விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அரசியல் பேரவை எனும் அமைப்பை திரு சகாயம் துவக்கினார்.

மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரசியல் பேரவை சார்பில் தமிழகம் முழுவதும் 20 தொகுதிகளில் வேட்பாளர்களையும் களம் இறக்கினார். இந்தத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்காத சகாயம் தன்னுடைய கொள்கை கோட்பாடுகளை தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடையே பரப்பி வந்தார்.

இப்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுட்ட சகாயத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நடத்திய கொரோனா பரிசோதனையில் இவருக்கு கொரோனா இருப்பதும் உறுதிச்செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 8 நாட்களாகச் சிகிச்சை பெற்று வரும் சகாயத்திற்கு தற்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் தனிக்குழு அமைத்து சகாயத்திற்கு மருத்துவர்கள் தீவிரச் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சகாயத்தைத் தவிர கனிமொழி எம்.பி, துரைமுருகன், நடிகர் செந்தில் போன்ற பலருக்கும் தேர்தல் பிரச்சாரத்தை ஒட்டி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.