கமல், ரஜினி முடிவுகள் குறித்து கருத்து கூறிய சமுத்திரக்கனி

  • IndiaGlitz, [Sunday,June 04 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளது குறித்தும், ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என்று கமல் கூறியது குறித்தும் பிரபல இயக்குனர், நடிகர், சமுத்திரக்கனி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சமுத்திரக்கனி நடித்து இயக்கிய 'தொண்டன்' திரைப்படம் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு ஊரிலும் 'தொண்டன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டருக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று கரூரில் 'தொண்டன்' திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் இயக்குநர் சமுத்திரகனி நேற்று ரசிகர்களை சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமுத்திரக்கனி கூறியதாவது:

சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது குறித்து கமல் தெரிவித்த கருத்து சரிதான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவரது சொந்த விருப்பம். மக்கள் தான் யார் வேண்டும் வேண்டாம் என்று முடிவு செய்வார்கள்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்து இருப்பது வலியான, வேதனையான விசயம். தமிழருக்காக ஐநா சபை வரை குரல் கொடுத்த, எந்த தப்பும் செய்யாதவரை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள். அதனையும் நாம் வேடிக்கை தான் பார்த்துகொண்டு இருக்கிறோம். இது தமிழர்களை பாதுக்காக்க நினைக்கிற ஒவ்வெருவரையும் அச்சுறுத்தும் செயல் இவ்வாறு சமுத்திரக்கனி கூறினர்.