close
Choose your channels

வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சிப்பது அநாகரீகத்தின் உச்சம்: சரத்குமார்

Friday, January 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். அந்த கருத்தும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியே தெரிவித்தார். இருப்பினும் தனது கருத்தை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறிவிட்டார்.

இருப்பினும் வைரமுத்து மீது தொடர்ந்து ஒருசிலர் கடுமையான விமர்சனம் வைத்து வருகின்றனர். குறிப்பாக வைரமுத்துவின் குடும்பத்தினர்கள் குறித்து அநாகரீகமாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

வைரமுத்து கூறியது தவறா சரியா என்பதை விட, அவர் வருத்தம் தெரிவித்தபிறகும், அவர்மேல் சுமத்தப்படும் பழிகளும் விமர்சனங்களும் அநாகரீகத்தின் உச்சம்.

அவர் ஒரு ஆராய்ச்சி ஆவணத்தில் மேற்கோள் காட்டப்பட்டதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அந்த கருத்து இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர் பெரும்பான்மை மக்களின் மனதை பாதித்த காரணத்தினால் அவர் உடனடியாக வருத்தம் தெரிவித்தார். அவர் கூறிய விளக்கத்தை முழுமையாக கேட்க தயாராக இல்லாத நிலையில், சூழ்நிலையின் தன்மையை புரிந்துகொண்டு அவர் உடனடியாக வருத்தம் தெரிவித்தது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

தமிழக மண்ணிற்கு தனது படைப்பினால் இந்திய அளவிலும் உலக அளவிலும் பெருமை சேர்த்த ஒருவரை நா கூசும் வகையில் வார்த்தைகளை உபயோகித்து அவரை கீழ்த்தரமான மனிதராக சித்தரித்து இது வரை அவர் சேர்த்த மரியாதையை மக்களின் அபிமானத்தை கடுமையான வார்த்தைகள் மூலம் சின்னாபின்னமாக்கி அவரை சிறுமை படுத்தியது கண்டிக்க தக்கது.

உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு மதிப்பை பெற்ற கவிஞரை மேலும் மேலும் துன்புறுத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

நான் ஏற்கனவே பதிவு செய்திருந்த படி ‘இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற குறளை நமக்கு வழங்கிட்ட வள்ளுவர் வாழ்ந்து பெருமை சேர்த்த தமிழ் மண் இது. தமிழனே தனது குலத்தில் பிரிவினை ஏற்படுத்த பிறரால் நடத்தப்படும் சூழ்ச்சியோ இது என்று தோன்றுகிறது. இதே மண்ணில்தான் காலம் காலமாக "அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வம்" என்றும் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களை தெய்வ அம்சமாக பார்க்க வலியுறுத்துகிறது. ஆனால், வைரமுத்து அவர்களின் தாயை அவரது குடும்பத்தில் இருப்பவரை எல்லாம் தரக்குறைவாக பேசுவது, எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இது மேலும் தொடர்வது கண்டிக்கத்தக்கது.  தமிழகத்தில் பல்வேறு பிரிவினைகளை உருவாக்கிவிடும் என்பதை நாம் உணரவேண்டும்.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.