மறக்க முடியாது பாலு சார், மறக்கவே முடியாது: சத்யராஜ் உருக்கம்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர் ஆகியோர் வெளியிட்ட வீடியோ குறித்து பார்ப்போம்.

நடிகர் சத்யராஜ், எஸ்பிபி மறைவு குறித்து கூறியபோது, ‘எஸ்பிபி சார், 40 ஆயிரம் பாடல்கள். உங்கள் குரலுக்கு வாயசைக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. உங்களை பிரிந்து வாழும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு நான் உள்பட கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மறக்க முடியாது பாலு சார், உங்களை மறக்கவே முடியாது’ என்று சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் டி ராஜேந்தர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது: என்னுடைய எத்தனையோ பாடல்களுக்கு உயிர் கொடுத்த எஸ்பிபி அவர்கள் மறைந்துவிட்டார் என்று நினைக்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது. அவருடைய இழப்பு இசையுலகிற்கே ஒரு பேரிழப்பு. அவருடைய குரலை கொரோனா குரல்வளையை பிடித்து எடுத்து கொண்டு போய்விட்டது. பாலில் தேன் கலந்தது போன்ற அவரது குரல் பார் இருக்கும் வரை நிலைத்திருக்கும். அவருடைய உடல் வேண்டுமானால் மறையலாம், ஆனால் அவரது குரல் எப்போதும் இருக்கும். அவருடைய குடும்பத்தினர்களூக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று டிராஜேந்தர் கூறியுள்ளார்.