பெண் என்பவர் வேற்றுகிரகவாசி அல்ல. சுசிலீக்ஸ் குறித்து சத்யராஜ்
- IndiaGlitz, [Tuesday,March 07 2017]
கடந்த சில நாட்களாக பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகும் பிரபலங்களின் அந்தரங்கள் கோலிவுட் திரையுலகையே கலங்கடித்துள்ளது. சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து அவ்வபோது வெளியாகும் வீடியோக்களுக்கு சமூக இணையதள பயனாளிகள் ஊக்கம் அளித்து வருவதையும் சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளருமான சத்யராஜ், சுசித்ரா லீக்ஸ் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில், 'நல்ல நண்பர்களை, காதலர்களை பார்த்து தேர்ந்தெடுங்கள். விளையாட்டாக எடுக்கும் புகைப்படங்கள் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கைக்கு வினையாக மாறலாம்.
பெண் நம்முடன் இங்கு வசிப்பவள், வேற்றுகிரக வாசி அல்ல. இது போல் புகைப்படங்களை வெளியிடுவதால் பலர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் இது போன்ற செயலை செய்ய வேண்டாம். பாதிக்கப்பட்ட பல பெண்களின் தகப்பனாக கேட்டுக்கொள்கிறேன்' என்று சத்யராஜ் தனது கருத்தை மிக உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
சத்யராஜின் இந்த வேண்டுகோளை ஏற்று சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தை மர்மமான முறையில் இயக்கி கொண்டிருக்கும் நபர் தனது செயலை நிறுத்தி கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.