close
Choose your channels

மாங்காடு பள்ளி மாணவியின் தற்கொலையில் கல்லூரி மாணவர் கைது… நடந்தது என்ன?

Monday, December 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்துவந்த பள்ளி மாணவி கடந்த 18 ஆம் தேதி மாங்காட்டில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கின் விசாரணையில் திடீர் திருப்பமாக கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

மாங்காடு பகுதியில் வசித்துவந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த சனிக்கிழமை மதியம் தனது வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான விசாரணையின்போது மாணவி எழுதிய 3 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

அதில் ஒரு கடிதம் மிகவும் கிழிந்த நிலையில் இருந்தது. மேலும் அதில் உறவினர்கள், ஆசியர்கள் யாரையும் நம்ப வேண்டாம். பெண்களுக்கு ஆசிரியர்கள் உறவினர்கள் பாதுகாப்பாக இல்லை. பாதுகாப்பானது தாயின் கருவறையும் கல்லறையும்தான். இந்தச் சமூகத்தில் பாதுகாப்பே இல்லை. பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற மாணவி குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து அந்தச் சிறுமிக்கு பாலியல் ரீதியாக யாரேனும் துன்புறுத்தி இருப்பார்களோ என விசாரணையில் ஈடுபட்ட போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர். இதனால் மாணவி படித்த பள்ளி, ஆசிரியர்கள், நண்பர்கள் எனப் பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் மாணவியின் செல்போனை மீட்ட போலீசார், பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் என 4 பேரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குன்றத்தூர் பகுதியில் உள்ள கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்துவந்த விக்கி என்ற விக்னேஷ்(21) என்ற இளைஞரை அவர்கள் கைது செய்தனர். இவர் உயிரிழந்த மாணவிக்கு ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்தி அனுப்பி வந்தது தற்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் விக்னேஷை நீதிமன்றத்தின்முன் ஆஜர்படுத்திய நிலையில் வரும் 3 ஆம்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பாலியல் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்குத் தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவி குறிப்பிட்டப்படி உறவினர்கள், ஆசிரியர்கள் யாரேனும் அவருக்கு தொந்தரவு கொடுத்திருப்பார்களோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.