சபர்ணாவின் தற்கொலைக்கு இதுதான் காரணமா?

  • IndiaGlitz, [Friday,November 11 2016]

பிரபல தொலைக்காட்சி நடிகை சபர்ணா சற்றுமுன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி செய்தியை பார்த்தோம். இந்த செய்தியை கேட்டு சக தொலைக்காட்சி சீரியல் நட்சத்திரங்கள் மட்டுமின்றி திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

கோவையை சொந்த ஊராக கொண்ட நடிகை சபர்ணா சென்னைக்கு வந்த புதிதில் போரூரில் தங்கியிருந்தார். பின்னர் இவர் சமீபத்தில் மதுரவாயல் பகுதியில் உள்ள Pace aquta என்ற அபார்ட்மெண்டில் சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்டில் குடியேறியுள்ளார்.

மேலும் சபர்ணா இயற்கையிலேயே தைரியமானவர் என்றும் யாராவது சோர்வாக இருந்தால் தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறி தேற்றும் குணம் கொண்டவர் என்றும் அவரது தற்கொலை முடிவை நம்பவே முடியவில்லை என்றும் அவருடன் பழகிய நண்பர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை பார்க்கும்போது கடந்த சில நாட்களாகவே அவர் மன அழுத்தத்துடன் இருந்துள்ளார் என்பது தெரியவருகிறது. கடந்த சில நாட்களாகவே வாய்ப்புகள் குறைந்தும் பொருளாதார நெருக்கடியில் இருந்ததாகவும், அதுமட்டுமின்றி சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களை சந்தித்து வந்ததாகவும் அவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்தே தெரிகிறது.

பொதுவாக கனவுத்தொழிற்சாலையில் உள்ளவர்கள் ஒரு கட்டத்தில் பணம், புகழ் ஆகிய உச்சக்கட்ட நிலையை அடைந்திருப்பார்கள். ஆனால் அதே நேரத்தில் திடீரென வாய்ப்புகள் குறைவு காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாகவோ திடீரென ஒரு சரிவு நிலைக்கு வந்துவிட்டால் அவர்களது மனம் உயர்ந்த நிலையில் இருந்து விடுபட மறுத்து இதுபோன்ற சோகமான முடிவை எடுக்க காரணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற சோக முடிவு வேறு யாருக்கும் வரக்கூடாது என்றே அனைவரின் கருத்தாக உள்ளது. இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சபர்ணாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்