செம்பருத்தி நாயகிக்கும், செழியனுக்கும் விரைவில் டும் டும் டும் .....!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

அண்மையில் சின்னத்திரை நடிகை ஷபானாவும், நடிகர் ஆர்யனும் காதலித்து வருவதாக செய்திகள் சமூகவலைத்தளங்களில் உலாவி வந்தன.

ஜீ தமிழ் என்ற தனியார் சேனலில், செம்பருத்தி என்ற சீரியல் கிட்டத்தட்ட 1000-எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதில் பார்வதியாக நடித்துவரும் ஷபானாவுக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு அடுத்த வருடம் திருமணம் என்றும், தன்னை கல்யாணம் செய்யவிருப்பவர் தாடி வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். தன் காதலர் யார் என்று சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார் ஷபானா.

இதேபோல் தனியார் சேனலான விஜய் டிவியில், பாக்கியலட்சுமி என்ற தொடரில் செழியனாக நடித்து வருபவர் தான் நடிகர் ஆர்யன். இவர் சில நாட்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

ரசிகர் ஒருவர் உங்களுக்கு ஜீ தமிழில் பிடித்த நாடகம் எது என கேட்க, ஆர்யன் ஜீ தமிழ் என்றாலே பிடிக்கும் என கூறியுள்ளார்.மற்றொரு ரசிகர் உங்களுக்கு பிடித்த பூ என்று கேட்க, அதற்கு செம்பருத்தி என பதில் கூறியுள்ளார். மலையாளம் தெரியுமா என ரசிகர் கேட்க, கத்துக்கிட்டே இருக்கேன் என பதிலளித்துள்ளார். அதில் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்வீர்களா..? என்ற ரசிகை ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு ஷபானவை குறிப்பிட்டு, ஆர்யன் இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் கூறிய ஷபானா அவர் என்னுடையவர் என்று பதிவிட்டிருந்தார். இதிலிருந்து இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள், டேட்டிங் செல்கிறார்கள் என்ற செய்தி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் நடிகர் ஆர்யன் இன்ஸ்டாகிராமில் திருமணம் குறித்தான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவளுடைய ஆன்மாவில் தான் காதலில் விழுந்தேன். ஏனென்றால் ஏதாவது ஒரு நாள் எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி குறையும். வெளிப்புற அழகும் குறையும். ஆனால் ஆன்மாவிற்கு வயது இல்லை, அது வாழ்ந்து கொண்டு இருக்கும். இது அன்பு வாழும் இடம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஷபானா நீங்கள் எப்போதுமே என்னை ஆச்சரியப்படுத்த தவறியதில்லை என்று பதில் கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு நிச்சயமாகி இருக்கலாம், விரைவில் திருமணம் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக ரேஷ்மா முரளிதரன், நக்ஷத்ரா, ஜனனி அசோக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இவர்களை வாழ்த்தி வருகிறார்கள்.