ஆணை திருத்தவே கல்யாணம்… சர்ச்சை கருத்தால் நெட்டிசன்களிடம் சிக்கிய பாலிவுட் நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,June 07 2023]

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வரும் நடிகர் ஷாஹித் கபூர் திருமணம் குறித்து பேசியுள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

42 வயதான நடிகர் ஷாஹித் கபூர் கடந்த 2011 இல் ஃப்ரெஞ்சு மொழியில் வெளியாகி உலக அளவில் பேசப்பட்ட “ஸ்லீப்லெஸ் நைட்ஸ்” எனும் திரைப்படத்தின் தாக்கத்தால் உருவாக்கப்பட்ட ‘ப்ளடி டாடி’ எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட்டிற்கு முன்பே இந்தத் திரைப்படம் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் ‘தூங்காவனம்’ எனும் பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடிகர் ஷாஹித் கபூர் நடிப்பில் அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கிய ‘ப்ளடி டாடி’ திரைப்படம் ஜுன் 9 ஆம் தேதி ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஷாஹித் கபூர் படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகர் ஷாஹித் கபூர் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது திருமணம் குறித்த தனது கருத்துகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் திருமணம் என்ற ஒட்டுமொத்த விஷயமும் ஒன்றே ஒன்றுக்காகத்தான். ஆண் தவறானவனாக இருந்தால் பெண் அவனை சரிசெய்ய வேண்டும். எனவே அவனின் எஞ்சியுள்ள வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவன் சரியானவனாக ஒரு நல்ல மனிதனாக மாறுவான். வாழ்க்கை என்பது அதுதான் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஷாஹித் கபூர் திருமணம் குறித்த பேசியுள்ள இந்தக் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தவறான ஆணை திருத்துவதுதான் ஒரு பெண்ணின் வேலையா? என்றும் நெட்டிசன்கள் பலர் அவரை விமர்சித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதைத்தவிர நீங்கள் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான ‘கபீர் சிங்’ திரைப்படத்தில் நடித்தீர்கள்? அதிலிருந்து இன்னுமா வெளியே வரவில்லை என்பதுபோன்ற விமர்சனங்களையும் நெட்டிசன்கள் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.