'இந்தியன் 2' படத்தை கைவிடுகிறாரா ஷங்கர்?

  • IndiaGlitz, [Friday,October 23 2020]

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு துவங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதனை அடுத்து கொரோனா வைரஸ் லாக்டவுன் வந்துவிட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக நின்றுபோனது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மத்திய மாநில அரசுகள் படப்பிடிப்பு தொடங்க அனுமதி அளித்தும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை. அது மட்டுமன்றி லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கமலஹாசன் தயாராகி வருகிறார் பிக்பாஸ் முடிவடைந்ததும் அவர் அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்திற்கான போட்டோஷூட் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’படத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஷங்கர் தற்போது லைக்கா நிறுவனத்திற்கு ஒரு கடிதம் எழுதி உள்ளதாகவும் அதில் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை தொங்குவது குறித்த திட்டத்தை அறிவிக்காவிட்டால் தான் வேறு படத்தில் பணிபுரிய இருப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது .

ஆனால் இந்த தகவலை லைகா நிறுவனத்தின் சிஇஓ மறுத்துள்ளார். இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் ’இந்தியன் 2’படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பில் 500 முதல் 600 பேர் வரை கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளதால் இது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம் என்றும், கமல்ஹாசனிடம் நேற்று கூட இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து ஆலோசனை செய்தோம் என்றும் ’இந்தியன் 2’படப்பிடிப்புக்கான திட்டமிடுதல் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ஷங்கர் கடிதம் எழுதியதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே என்று கூறியுள்ளார். எனவே ’இந்தியன் 2’ படத்தை முடித்துவிட்டு தான் ஷங்கர் அடுத்த படத்திற்கு செல்வார் என்பது உறுதியாகியுள்ளது.