பிரபல தயாரிப்பாளர் மறைவிற்கு 'சிலம்பாட்டம்' சிம்பு இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

நடிகர் சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்ற செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் ’சிலம்பாட்டம்’ படத்தில் நாயகனான சிம்பு, தயாரிப்பாளர் சுவாமிநாதனுக்கு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தயாரிப்பாளர் திரு சுவாமிநாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். புத்திசாலி. எந்த நேரத்தில் யாரை வைத்து என்ன படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவான விளக்கம் உள்ளவர். ’சிலம்பாட்டம்’ பட களத்தில் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது எனது தேவைகளை அறிந்து சகோதரனைப் போல் நடத்தி படப்பிடிப்பையும் முடித்து வைத்தார்.

நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால் இப்படி ஒரு சில நாட்களில் விடைபெற்றுச் செல்வார் என தெரியாது. மருத்துவமனை சென்று ஆறுதல் கூட சொல்ல முடியாத ஒரு நோயுடன் போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.

அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும், எந்த காலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்து இருப்பதில் வருத்தம் அடைகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்திற்கும் திரையுலகினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மரணமடைந்த அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும். வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு சிம்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்