எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை: வெங்கட்பிரபு தாயார் மறைவுக்கு சிம்பு இரங்கல்!

  • IndiaGlitz, [Monday,May 10 2021]

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜி அவர்களின் தாயார் மணிமேகலை அவர்கள் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் வெங்கட் பிரபு குடும்பத்தினருக்கு திரை உலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

அன்பு இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நண்பர் பிரேம்ஜி, யுவன் உள்பட என் சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என தெரியவில்லை. எதையும் சாதாரணமாக எளிமையாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள் நீங்கள். கடந்த இரண்டு வருடமாக இதற்குமுன் நட்பாக இணைந்திருந்தாலும் இந்த இரண்டு வருடம் இணைந்து பணிபுரியும் போது எவ்வளவு அழகான எளிமையாக எந்த சூழ்நிலையையும் கடந்து செல்கிறீர்கள் என பார்த்திருக்கிறேன்

ஆனால் அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு, இதை கடப்பது என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன். அம்மாவின் இழப்பு நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆறுதல் சொல்ல முடியாத ஒரு இழப்பு. அப்பாவிற்கும் குடும்பத்திற்கும் உங்கள் அனைவருடனும் இழப்பையும் வேதனையையும் பகிர்ந்து கொள்கிறேன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று சிலம்பரசன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்